ஒளிந்திருந்த தாள்

- மு.குலசேகரன் | ஓவியம்: ஸ்ரீதர்

சுற்றிலும் துப்பாக்கிகள் விரைவாக நெருங்கி வந்துகொண்டிருந்தன. அவற்றிலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டுமென்று சுந்தரம் விழித்துக் கொண்டான். அடிமடியைக் கை தொட்டுப் பார்த்தது. காவல்துறையினர் தன்மையாக நடந்துகொண்டால் சரணடையலாம். அல்லது அதிகார வெறியைக் காட்டினால் வெடிகுண்டை வீச வேண்டும். அது மிக சப்தமாக வெடிக்கும். அவர்கள் மிச்சமில்லாது அழிவார்கள். அவன் உற்றுப் பார்த்தான். கரிய திரையாகத் தொங்கும் இருளில் ஒன்றும் தெரிய வில்லை. சற்று நேரம் அசையாது காத்திருந்தான். அவன் சில நாட்களாக ஒளிந்திருக்கும் சிறு கொட்டகை மெல்ல புலனாகியது. அங்கு யாருமில்லை. ஆனால் தான் கனவு கண்டதைப் போல் பிடிபடுவோமெனத் தோன்றியது. அவனைக் காவல் துறை கவனமாகத் தேடும். ஒருவர் எப்போதும் ஒளிந்துகொண்டிருக்க முடியாது. ஒரு கணமாவது வெளிப்பட்டுவிடுவார். அப்போது காவல்துறை ஒவ்வொரு வாசலாகத் திறந்து வரும். ஒரே ஒரு கேள்விதான். அவர்கள் உயிருடன் பிடிக்கப்போகிறார்களா அல்லது போலி மோதல் பெயரில் சுட்டுத் தள்ளுவார்களா? பல நாட்கள் பட்டினியில் அலைந்து திரிந்தாயிற்று. தன்னை மறந்து தூங்கி நீண்டகாலமாகிறது. அப்படியும் சரணடைய விருப்பமில்லை. அதைச் செய்தால் வெடிகுண்டுக்கு அவமானம்.

அவன் குனிந்து வெளியில் வந்தான். தோள் துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டான். அடிவானம் விளக்கேற்றியதுபோல் வெளிச்சமாக இருந்தது. தங்கியிருந்த கொட்டகை வரை காட்டுச் சரிவு நீண்டிருந்தது. அங்கங்கே பாறைகள் உருண்டு விழுந்து விடும்போல் தொற்றியிருந்தன. பற்பல மரங்கள் பழகியவை போல் பார்த்துக் கொண்டிருந்தன. பறவைக் குரல்கள் இடைவெளிகள் இல்லாமல் எழுந்துகொண்டிருந்தன. உன்னிப்பாகக் கேட்டால் புரிந்துவிடும். அவை ஆபத்து நெருங்குவதைக் காட்டும் எச்சரிப்புகள். அந்த ஓலைக்கொட்டகை காட்டுக்கொல்லைக் காவலுக்குப் போட்டுக் கைவிடப்பட்டது. முன்பு பயிற்சிக்கு வருகையில் அறிமுகமானது. பழகிவிட்டால் பழங்குடிகளோடு காலமெல்லாம் தலைமறைவாக இருக்கலாம். அது நிம்மதியான சாதாரண வாழ்க்கை. இப்போது மறுபடியும் திரும்ப வேண்டும். இன்னும் ஒழியவேண்டியவர்கள் நிறையயிருக்கிறார்கள். மீண்டும் மடியைத் தடவிப் பார்த்துக்கொண்டான்.

முதன்முதலில் குழுவினர் வேறு ஊரில் ஒதுக்குப்புறமான குடிசைக்கு அழைத்துப் போனார்கள். ரகசிய கூட்டத்தில் கலந்துகொண்டது கனவு காண்பதைப் போலிருந்தது. அனைவரும் மண்ணில் அருகருகில் உட்கார்ந்திருந்தார்கள். தோழர் என்னும் வார்த்தை வாயில் மிட்டாயைப் போலிருந்தது. அதை அடிக்கடி அழுத்தம் திருத்தமாக உச்சரித்தார்கள். இதுவரை யாரும் அப்படி சமமாகப் பழகியதில்லை. அவர்கள் பேசியது முழுக்கப் புரியவில்லையானாலும் நம்பிக்கையாயிருந்தது. பல நாட்களுக்குப் பின் வெடிகுண்டுகளைத் தயாரிக்கக் கற்றபோது புதிய ஒன்றைக் கண்டுபிடித்ததைப் போலிருந்தது. சிறிய இரும்புத் துண்டுகளையும் வெடிக் குச்சியையும் பொதிந்து மருந்துப் பசையைப் பதனமாக உருட்ட வேண்டும். கைகளிலும் உடையிலும் ஒட்டிய வாசனை என்ன கழுவினாலும் போகாது. உணவுக் கவளத்தை வாயில் வைக்கையில் வீசும். சுந்தரம் ஆசையுடன் குண்டுகளைத் தடவுவான். காப்பூசி நீங்கினாலும் தவறி விழுந்தாலும் பற்றும் என்று மூத்த தோழர் தொடர்ந்து எச்சரிப்பார். அது நல்ல நெற்றைப் போல் தோன்றியது. ஒன்று போதும், கூசிக் குறுகி நின்றவர்களை நிமிர வைக்க. தந்தை, பாட்டன், பூட்டன்களை ஏசிய வாய்களை ஒரேயடியாக அடைக்கும். பூமிக்குச் சொந்தம் கொண்டாடுபவர்கள் பயமுற வேண்டும். இனி அவர்கள் ஏய்க்கலாகாது. ஆதரவற்றோருக்கு வெடிகுண்டு உற்ற துணை. அதன் மொழி அனைவருக்கும் புரிவது. ஆனால், அது வைத்திருப்போரையும் அழிக்கும்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!