இந்தியத் திருமணங்கள் சுயசாதிக்குள்ளேயே நிகழ்த்தப்படும் இயல்பு, சாதி படிநிலையைப் பாதுகாக்க உதவுகிறது. ஒரு பெண் சாதி விதிகளை மீறி சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டால், அதிலும் ஒரு தலித் ஆணைத் திருமணம் செய்துகொண்டால் கௌரவம் பாழ்படுவதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் இக் கட்டுரை மூன்று தலித் இளைஞர்களின் கொலைச் சம்பவங்கள் மீதான சட்ட நடவடிக்கைகளின்போது சாதியும் பாலினமும் இயங்கிய சிக்கலான விதம் குறித்து அலச முற்படுகிறது.
சாதி மற்றும் பாலின விதிமுறைகளோடு இறுகப் பின்னிப் பிணைந்துள்ள இந்தியாவின் திருமண மரபுகள் ஒரே சாதியைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிச்சயிக்கப்படுவதையே வலியுறுத்துகின்றன. சொந்தச் சாதிக்குள்ளேயே திருமணம் முடிப்பது சாதிப் படிநிலைகள் நிலைத்து நீடிக்க முக்கியக் காரணியாக இருப்பதுடன், ஆதிக்கச் சாதி பெண்களுக்குச் சடங்கு சார்ந்த தூய்மையையும், சில பொருளாதார பயன்களையும் கையளிக்கிறது. இப்படிப்பட்ட அனுகூலங்கள் பெண்கள் கட்டாயப்படுத்தப்படாமலேயே சொந்தச் சாதிக்குள் திருமணம் செய்துகொள்ள இணங்குவதை உறுதி செய்கின்றன.
வரலாற்று ரீதியாகவே பார்ப்பனர்களும் மற்ற ஆதிக்கச் சாதி ஆண்களும் தலித் பெண்கள் மீது பாலியல் ஆதிக்கம் செலுத்திவந்திருக்கிறார்கள். கிராமப்புறங்களில், வயல்வெளிகளில் பாடுபட்ட தலித் பெண்கள் சவர்ண1 ஆண்களால் பாலியல் ரீதியாகவும் வன்கொடுமை – சாதியமைப்பில் உயர்நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமையால் – செய்யப்பட்டார்கள். மேலும், ஜோகினி போன்ற சில மரபுகளும் – ஒரு வகையான மதரீதியான விபச்சாரம் (தேவதாசி முறை போன்று) – தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி பெண்களைப் பாலியல் இச்சையோடு அணுக வழி வகுத்தன. திருமணம் செய்துகொள்ளாமலே பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் சம்பந்தம் எனும் அமைப்பு, கேரளாவின் நம்பூதிரி பார்ப்பன ஆண்கள் தாய்வழி சமூகமாக இருந்த நாயர் பெண்களுடன் சேர்ந்து வாழ வழி செய்தது. இந்த வழக்கம் சீர்திருத்த இயக்கங்களால் முடிவுக்கு வந்தது. அதற்கு முன்பே நாயர் ஆண்களும் பின்னர் நம்பூதிரி ஆண்களும் இதற்கான முயற்சிகளைச் செய்தார்கள். ஆனால், இதனால் பார்ப்பனரல்லாத சாதிக் குழுக்களும் சுயசாதிக்குள் திருமணம், பெண்களின் மீது ஆதிக்கம் செலுத்துவது போன்ற வழக்கங்களில் தீவிரம் காட்டத் துவங்கின. சீர்திருத்தங்கள் பார்ப்பன ஆணாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, சுயசாதி திருமணங்களும் ஒருதார மணமும் சாதி அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்கான முக்கிய அம்சங்கள் என்றாகிப் பார்ப்பனிய ஆணாதிக்கத்தை வலிமைப்படுத்தவே செய்தன.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then