தமிழ் மரபில் ‘கூத்து’, ‘நாடகம்’ என்பவை ஆகப் பழஞ்சொற்கள் என்பதில் ஐயமில்லை. தொல்காப்பியம், சங்க இலக்கியம் காலந்தொடங்கி இவ்விரு சொற்களும் புழக்கத்தில் இருந்துவருகின்றன. பழமரபுப்படி இவ்விரு நிகழ்த்துகலைச் சொற்களையும் இருவேறு வடிவங்களாக அடையாளம் காண முடியவில்லை. சங்க காலத்தில் ‘கூத்து’ என்பது ஒரு பொதுச்சொல்லாக இயங்கிவந்துள்ளது. அடவுகள் போட்டு, மெய்ப்பாடுகள் தோன்ற ஆடிய பல்வகை நிகழ்த்துகலைகளையும் கூத்து என்ற சொல் அடையாளப்படுத்தியுள்ளது. நாடகம் என்பது ‘கதைத் தழுவிய கூத்து’ என்று அடியார்க்குநல்லார் உரைக்கிறார். ஆக, கதை தழுவி வருகிற பல்வகையான கூத்துகளையும் ‘நாடகம்’ என்ற சொல் உணர்த்துகிறது என்று கொள்ளலாம். சங்க காலத்தில் தமிழ் மண்ணில் இருந்துவந்த நிகழ்த்துகலைகளைப் பல்வேறு நிகழ்த்துநர்கள் நிகழ்த்திக்கொண்டிருந்திருக்க வேண்டும். சங்க இலக்கியங்கள் பல நிகழ்த்துநர்களைச் (கண்ணுளர், ஆரியர், கோடியர், வயிரியர், பாடினி, கூத்தர், விறலியர்…) சுட்டுகின்றன. இவ்வகையான பல்வேறு நிகழ்த்துநர்கள் சார்ந்தே நிகழ்த்துகலைகளின் வரலாற்றை வரையறுக்க வேண்டும். அதோடு, அவற்றின் நிகழ்த்து முறைகளையும் கணக்கில் கொள்ளுதல் வேண்டும்.
மேலே குறிப்பிட்டது போல, “தொல்காப்பியம், பதினென்கீழ்க் கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, கம்பராமயாணம் போன்ற தமிழ்ப் பெருநூல்களில் கூத்து, நாடகம் போன்ற சொற்களும் அவற்றுடன் தொடர்புடைய கூத்தன், கூத்தர், கூத்தி, கூத்தியல், கூத்தியர், கூத்தாட்டவை, கூத்தப்பள்ளி, அரங்கக், கூத்தியர், ஆடல் கூத்தியர், கூத்தியல் பறிந்த கூத்தியர், கூத்துள்படுவோர், நாடக மகளிர், நாடக மடந்தை, நாடகக் கணிகை, நாடகக் காப்பிய நன்னூல் போன்ற சொற்சேர்க்கைகளும் பலவாறாகக் காணப்படுகின்றன. கூத்து, நாடகம் இரண்டும் ஒருபொருட்கிளவியாகப் பயன்பட்டுள்ளமை, ‘அரங்கக்கூத்தி சென்றையங் கொண்டதும் நகுதலல்லது நாடகக் கணிகையர்’ எனும் மணிமேகலை (24: 22-24) வரிகளின்றும் தெரியவருகிறது. ஆயின், பர்ரோ மற்றும் எமன்னோ உருவாக்கிய திராவிட வேர்ச்சொல் அகராதி (A Dravidian Etymologitcal Ditctionary; 1961) நாடகம் எனும் சொல் வடிவைக் கொண்டிலங்கவில்லை.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





