தானாய் விடி வெள்ளி
தோன்றுகின்ற சங்கதிகள்
வானத்தில் மட்டும்தான்
வாழ்வில் இருள் தொடரும்.
– வ.ஐ.செ.ஜெயபாலன், பதினோரு ஈழத்துக் கவிஞர்கள், க்ரியா, சென்னை, 1984.
தமிழ் தலித் இலக்கிய வரலாற்றின் அறியப்படாத நட்சத்திரமாகவே தோன்றி மறைந்திருக்கிறார் விடிவெள்ளி. இயற்பெயர் மேரி ஸ்டெல்லா, ஸ்டெல்லா என்பதன் பொருளும் விடிவெள்ளிதான்.
தமிழின் முதல் தலித் தன்வரலாறாகக் கருதப்படும் பாமாவின் ‘கருக்கு’ (1992) வெளியான இரு ஆண்டுகளுக்குள்ளாகவே வெளிவந்த மற்றொரு தலித் தன்வரலாற்று நூல்தான் விடிவெள்ளியின் ‘கலக்கல்’ (1994). இரு நூல்களையும் பதிப்பித்தது மதுரையிலுள்ள சமுதாய சிந்தனை செயல் ஆய்வு மையம். பாமாவின் ‘கருக்கு’ பெற்ற கவனத்தையும் விமர்சனங்களையும் ‘கலக்கல்’ பெறவில்லை. விடிவெள்ளி இதற்குப் பிறகு வேறு எந்தவொரு நூலையும் எழுதியதாகவும் தெரியவில்லை. நூல் உரிய கவனம் பெறாததும் அதற்கொரு காரணமாக இருந்திருக்கலாம்.
விடிவெள்ளி, 15 ஆகஸ்ட் 1947 அன்று திருவண்ணாமலையில் பிறந்தார். தந்தை சின்னப்பன், தாயார் மாரியம்மாள். ஆரணியிலுள்ள புனித வளனார் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், பின்னர் திருப்பத்தூர் இம்மாகுலேட் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியிலும் பயின்றார். பட்டம் பெற்ற பின் ஆரணியிலேயே மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1970 முதல் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு சலேசிய சபையில் பெண் துறவியாகச் செயல்பட்டார். 1981 முதல் 1984 வரை கத்தோலிக்கத் தலைநகர் ரோமுக்குச் சென்று இறையியல் கல்வி பயின்றார், துறவு வாழ்வின் பொய்மையையும் அதன் பாசாங்கையும் தன் நூலில் அழுத்தத்துடன் பதிவுசெய்கிறார்.
“80% ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயனாக இருந்த நாசரேத்து (Nazareth) இயேசு, அதிகார மமதையில் அரசோட்சிய உரோமைப் பேரரசைக் கண்டனம் செய்த இயேசு, சின்னஞ்சிறிய சகோதர சகோதரிகளோடு நண்பனான இயேசு, நலிந்தோரின் நாயகனாகச் சம உரிமை கேட்டு எருசலேமை முற்றுகையிட்ட இயேசு, ஆளும் வர்க்கத்தை எதிர்த்ததால் சிலுவைச் சாவினைச் சந்தித்த இயேசு, இன்று நான் காணும் இயேசுவின் பிரதிநிதிக்குச் சவாலாக என் மனத் திரையிலே தோன்றி ஒரு போர் நடத்திக்கொண்டிருப்பதாகத் தெரிந்தது…
இயேசு எருசலேம் தேவாலயத்திற்குள் புகுந்து, ‘என் தந்தையின் இல்லத்தை வியாபாரக் கூடமாக்கிவிட்டீர்களே’ என்று சாட்டையால் அடித்து அப்புறப்படுத்திய நிகழ்ச்சி எனக்குள் மாறிமாறி வந்துகொண்டிருந்தது.”
ரோமிலிருந்து திரும்பிய பின்னர் தஞ்சை வட்டாரத்துக்கான ரீஜனல் சுப்பீரியராக நியமிக்கப்பட்டார். அந்தப் பணிக்காலத்தில்தான் கிறிஸ்தவ மதத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியமைப்பின் ஒடுக்குமுறைகளுக்கும், ஆணாதிக்க அமைப்புமுறைக்கும் எதிராக அமைப்பிற்கு உள்ளிருந்தே அவர் நிகழ்த்திய போராட்டங்கள் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாத நிலையில் கிறித்துவ அமைப்பிலிருந்து வெளியேறினார். மத நிறுவனத்துடன் தனக்கிருந்த அத்தனை தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டு, தன்னுடன் பணியாற்றிய சந்தான சந்திரன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். சென்னைக்கு அருகிலுள்ள படப்பையில் ஆசிரியராகவும், தன் கணவருடன் இணைந்து Integral Development Action என்ற அமைப்பின் மூலம் சமூகச் செயல்பாட்டாளராகவும் பணியாற்றினார்.
“குளத்தைக் கலக்கும்போதுதானே சேற்றில் புதைந்துகிடக்கும் முத்துக்களும் உயர் ரக மீன்களும் கைக்குக் கிடைக்கின்றன! அவ்வாறே அநீத சமூகக் குளம் கலக்கப்படும்போதுதான் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியே வரும். அவைகள்தான் மக்களை விழித்தெழச் செய்யும். அந்த விழிப்புணர்வுதான் விடுதலைக்கு வித்திடும். இந்தக் கண்ணோட்டத்தில் இந்த ஏட்டிற்குக் ‘கலக்கல்’ என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கலக்கல் பணியைச் செய்கிறவர்கள் இறைவாக்கினர்களாக இருந்திருக்கிறார்கள். சமுதாயத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் சமூக விடுதலையைத் தேடுபவர்களும்தானே இப்பணியைச் செய்யமுடியும். அப்பணியின் சிறுமுயற்சியாக இந்த ஏடு எழுதப்பட்டுள்ளது. தலித் மக்கள், குறிப்பாக தலித் பெண்கள், சமூக, சமய சுழற்சியில் மீண்டும் சிக்கிக்கொள்ளாமல் விடுதலை வாழ்வு பெறவேண்டுமென்னும் ஆவலோடு என் அனுபவங்களை எழுத்தாக வடித்துள்ளேன்.”
தன்னுடைய தன்வரலாற்றை ஒரு சாட்சியமாகத்தான் முன்வைத்தார் விடிவெள்ளி. தமிழ் இலக்கிய உலகம் விடிவெள்ளியின் ‘கலக்கல்’ நூலை இன்னும் கவனிக்காமல் இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று.
இந்நூலை மறுபதிப்புச் செய்ய அவரிடம் உரிய அனுமதிபெற நாங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக அவரது முகவரியைத் தேடினோம். பின்னர், எழுத்தாளர் மாற்கு-வின் உதவியால் விடிவெள்ளியின் மகன் திரு.பூபால்ராஜ் தொடர்பு கிடைத்தது. கணவர் மறைந்த பிறகு உடல் நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளாகவே பேசவோ, செயல்படவோ இயலாத நிலையில்தான் இருந்தார். கடந்த 18 ஜூன் 2025 அன்று விடிவெள்ளி மறைந்தார்.
சில நேரங்களில் சில மனிதர்களின் வாழ்வு நேரடியாகவோ அல்லது அவர்களது படைப்புகள் வழியாகவோ நமக்கு அறிமுகமாகும். அந்த வாழ்வு வெயில்கால இரவுகளைப் போன்று, முடிவிலாது நீளும் வானின் நீல வெளிச்சமாக நம்மை விழித்திருக்கச் செய்கிறது. விடிவெள்ளி தமிழ் இலக்கிய உலகிற்கு வலிமையும் தீவிரமும் மிக்க ஒரு தன்வரலாற்றைத் தந்துசென்றிருக்கிறார். தன் நூலைக் கையிலெடுக்கும் வாசகருக்கு ஒரு தலித் கிறித்துவப் பெண்ணாக இந்தியச் சாதியமைப்பில் வாழ்வது என்ன என்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறார். சமரசங்களற்ற நேர்த்தியும் நேர்மையும் கொண்ட ஆழமான தன் எழுத்தில் ஒரு பெருங்கோபத்தைப் பதிவுசெய்கிறார். தன்னிலை குறித்த தெளிவுடன், சமத்துவமற்ற சமூகத்தில் தன் நிலையை உணர்வதிலிருந்து எழும் கோபம் அது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் புரட்சியாளர்களாக இருக்க முடியாது என்ற மூடநம்பிக்கையை உடைக்கின்றன விடிவெள்ளியின் எழுத்துகள். அவருடைய பார்வையில் “இயேசு கிறிஸ்துவே ஒரு புரட்சியாளர்தான்”. விடிவெள்ளியின் ‘கலக்கல்’ நூலை வாசிப்பது நம்பிக்கைக்கும் எதிர்ப்பிற்கும் முற்போக்கான சிந்தனைக்கும் இடையில் நிற்கும் உண்மையான, சுயமான தன்னிலைக்கு நம்மைச் சாட்சியாக்குகிறது. விடிவெள்ளியின் ‘கலக்கல்’ நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Panthers Paw Publication வெளியீடாக விரைவில் வெளியாக இருக்கிறது.
“தொடர்ந்து கலங்கும் மனம், துலங்கும் தலித் விடுதலை” என்றார் விடிவெள்ளி.