காலப்பொருத்தம் கருதியும் மாற்றுக் குரல்களை ஆவணப்படுத்தும் தேவை கருதியும் ஏற்கெனவே வெளியான படைப்புகளை அவ்வப்போது மறுபிரசுரம் செய்துவருகிறோம். அந்த வகையில் பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு : தொகுதி 15) நூலின் முடிவுரை உங்கள் வாசிப்புக்கு…
நான் இங்கு நிறுத்திக்கொள்ள எண்ணுகிறேன். ஏனெனில், நான் சொல்ல வேண்டிய பொருள் குறித்து அனைத்தையும் சொல்லிவிட்டேன். சட்டமொழியில் கூறுவதானால் என் வாதத்தை முன்வைத்திருக்கிறேன். இவ்வாறு செய்யும்போது விக்டோரியா அரசு காலத்து வழக்கறிஞர்களுக்கு மிகவும் பிடித்தமான, நெடுநீளமான நடையைக் கைக்கொண்டிருக்கிறேன். இந்த நடையில் ஒருவரை ஒருவர் வினாவுதல், விடைமொழிதல், கண்டனம் தெரிவித்தல், மறுப்புரைக் கூறல், எதிருரைக்கு எதிருரை, மறுப்புரைக்கு மறுப்புரை ஆகியன எல்லாம் அமையும். பாகிஸ்தானுக்கு ஆதரவான, எதிரான ஒரு முழுமையான சித்திரத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டே இந்த நடையைக் கைக்கொண்டேன். முந்தைய பக்கங்கள் விவாதங்களைத் தருகின்றன. இப்பக்கங்களில் காணப்படும் உண்மைகள் என் அறிவுக்கும் நம்பிக்கைக்கும் உண்மை எனப் புலப்பட்டவை. என் முடிவுகளையும் நான் குறித்துள்ளேன். இனி இந்துக்களும் இஸ்லாமியர்களும் அவர்களுடைய கருத்தைக் கூற வேண்டும்.
அவர்களுடைய இந்தப் பணியில் உதவுவதற்காக, சிக்கல்களை முன்மொழிதல் நல்லது. விவாதத்தில் கீழ்வரும் சிக்கல்கள் கவனிப்பதற்குரியன:
- இந்தியாவின் அரசியல் முன்னேற்றத்திற்கு இந்து – முஸ்லிம் ஒற்றுமை தேவைதானா? தேவையாயின் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இரண்டு தனித் தனி தேசங்கள் என்று புதிதாகத் தோன்றியுள்ள சூழ்நிலையில் இந்த ஒற்றுமைக் குறிக்கோளைத் தடையின்றி அடைதல் இயலுமா?
- இந்து – முஸ்லிம் ஒற்றுமை நடக்கக் கூடியதாயின், அது திருப்திப்படுத்துதல் என்ற முறையிலா, தீர்வு என்ற முறையிலா?
- திருப்திப்படுத்தும் வகையில் அமைவதானால், முஸ்லிம்களின் மற்ற ஈடுபாடுகளுக்குப் பாதகம் ஏற்படாவகையில் அவர்களின் மனப்பூர்வமான ஒத்துழைப்பைப் பெற என்ன சலுகைகள் வழங்கப்படும்?
- தீர்வு என்ற வகையில் அமைவதானால், அத்தீர்வுக்குரிய வரையறைகள் யாவை? இரண்டு மாற்று வழிகளே உள்ளன என்றால் வீ) இந்தியாவைப் பாகிஸ்தான், இந்துஸ்தான் எனப் பிரிப்பது வீவீ) சட்டமன்றம், செயலாண்மை மற்றும் பணிகளில் ஐம்பது ஐம்பது விழுக்காடு அளிப்பது எனும் இவ்விரண்டில் எது விரும்பத்தக்கது?
- இந்தியா ஐக்கியப்படுத்தப்பட்ட ஒரே நாடாக அமையுமாயின், அது வெள்ளையர்களிடமிருந்து வெற்றி கொள்ளப்பட்டது என்று கருதும் நிலையில், இந்துக்களும் முஸ்லிம்களும் அதன் சுதந்திரத்தைப் பாதுகாப்பார்கள் என்று நம்பலாமா?
- இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே தற்போது நிலவும் பகைமை உணர்வையும், இந்துக்களும் முஸ்லிம்களும் இரு வேறுபட்ட தேசங்கள் என்று புதிதாக எழுந்துள்ள சித்தாந்தத்தையும், அவர்களது இறுதி கதிப்போக்குகள் நேரெதிரானவையாக இருப்பதையும் கருத்திற்கொண்டு பார்க்கும்போது, இவ்விரு தேசங்களுக்கும் ஒரே அரசியலமைப்பை உருவாக்குவது சாத்தியமா, அத்தகைய அரசியலமைப்புச் செயல்படுவதைத் தடுக்காமல், அதன் வெற்றிக்குப் பாடுபடும் உத்தேசத்தை அவை வெளிப்படுத்துமா?
- இரு தேசக் கோட்பாடு நிலைத்துவிட்டது என்ற கருத்தில் எண்ணிப் பார்த்தால் இந்தியா ஒரு முழு அமைப்பற்ற, ஒத்திசைவில்லாத ஒரு பகுதியாக இருக்காதா? ஒரு பொது விதியையும் நம்பிக்கையையும் கொண்ட வலிமையான நாடாக உருவாகத் தகுதியற்றதாக அது இருக்காதா? அந்நிலையில் அது ஒரு வலிமையற்ற, பலவீனமான நாடாக ஆகாதா? அந்நிலையில் அது வெள்ளையர்க்கோ பிறர்க்கோ நிரந்தர அடிமையாகிவிடாதா?
- இந்தியா ஒரே நாடாக இருக்க முடியாது என்றால் இந்தியர்களே அதன் இசைவற்ற இந்த நாட்டை அதன் இயல்பான பகுதிகளாக அதாவது பாகிஸ்தான், இந்துஸ்தான் என்று பிரிந்துபோக உதவக்கூடாதா?
- இந்துக்களும் முஸ்லிம்களும் ஏதாவது ஒரு காலத்தில் ஒற்றுமையாகி, ஒரே தேசத்தின் மக்களாய் வாழ்வார்கள் என்று முஸ்லிம்கள் வாழும் பாகிஸ்தானையும் இந்துக்கள் வாழும் இந்துஸ்தானையும் இரண்டு தனித்தனி நாடுகளாக்கி அவற்றின் வளர்ச்சிக்கு வழிவகுப்பது நல்லதில்லையா?
இதுவரை தரப்பட்டுள்ள விவரங்களின் உதவியோடு இந்தப் பிரச்சினைகளை உரிய முறையில் புரிந்துகொண்டு, வாசகர்கள் தமது சொந்த முடிவுகளுக்கு வருவதற்குப் பின்வரும் மூன்று தடைகளைத் தவிர வேறு எந்தத் தடையும் இருக்கமுடியாது: 1. வரலாற்று ரீதியான தேசியம் குறித்த தவறான உணர்வு. 2. ஒரு குறிப்பிட்ட பிரதேசம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்குத்தான் சொந்தம் என்ற தவறான கருத்து. 3. எதையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும் விருப்பமின்மை. இந்தத் தடைகளில் கடைசியாகக் குறிப்பிட்ட தடைதான் வெற்றிகொள்வதற்கு மிகவும் கடினமானது. துரதிருஷ்டவசமாக, சிந்திப்பது என்பது இந்தியாவில் அரிது; அதிலும் சுதந்திரமான சிந்தனை அரிதிலும் அரிது. இதுவும் குறிப்பாக இந்துக்களைப் பொறுத்தவரை உண்மையானதாகும். எனவே, இந்நூலின் பெரும்பகுதி அவர்களை நோக்கிக் கூறுவதாகவே அமைகிறது. இதற்குரிய காரணங்கள் தெளிவானவை. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள். பெரும்பான்மையாக உள்ள நிலையில் அவர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் உண்டு. அவர்கள் பகுத்தறிவு சார்ந்த அல்லது உணர்ச்சிப்பூர்வமான தடைகளைச் சந்திக்க முயற்சி மேற்கொள்ளவில்லை எனில், அமைதியான தீர்வுக்குப் பெரிதும் வாய்ப்பு இல்லை. ஆனால், இந்த விவாதத்தில் பெரும்பகுதியை அவர்களைக் குறிவைத்து முன்வைத்திருப்பதற்குச் சில சிறப்பான காரணங்கள் உள்ளன. அவை மற்றவருக்குத் தெளிவாகத் தெரியாமல் போகலாம். தங்கள் உடனிருப்பவர்களின் கதிப்போக்குக்கு வழிகாட்டும் இந்துக்கள் கார்லைல் கூறிய ‘காணும் கண்’ணை இழந்துவிட்டனர். அவர்கள் சில வெற்று மாயைகளின் கவர்ச்சியால் நடந்துகொண்டிருக்கின்றனர். இதன் விளைவு இந்துக்களுக்கு மிகப் பயங்கரமானதாக இருக்கும் என அஞ்சுகிறேன். இந்துக்கள் காங்கிரஸின் பிடியில் இருக்கின்றனர்; காங்கிரஸ் திரு. காந்தியின் பிடியில் உள்ளது. திரு. காந்தி காங்கிரஸுக்கு சரியான வழிகாட்டியுள்ளார் என்று கூற முடியாது. திரு.காந்தி இரு விஷயங்களில் தஞ்சம் புகுந்து சிக்கலை எதிர்கொள்வதைத் தவிர்க்கிறார். இந்தியாவைப் பிரிப்பது நியாயமற்றது, பாவமானது, தான் அதற்குத் துணையாக இருக்க முடியாது என்று அவர் செல்லத் தொடங்கியுள்ளார். இது ஒரு விந்தையான விரதமாகும்; பிரிவினைச் சிக்கல், இயற்கையாகவும் வரலாற்றடிப்படையிலும் அமைந்த எல்லைகளைத் தேசிய அடிப்படையில் மாற்றுதல் ஆகியவற்றை இந்தியா மட்டும் எதிர்கொள்ளவில்லை. போலந்து மூன்றுமுறை பிரிக்கப்பட்டுள்ளது. இனிமேலும் அது பிரிவுபடாது என்று கூறுவதற்கில்லை. கடந்த 150 ஆண்டுகளில் பிரிவுபடாத ஐரோப்பிய நாடுகள் மிகச் சிலவே. இது நாட்டுப் பிரிவினை என்பது நியாயமானது என்றோ, நியாயமற்றது என்றோ கூறுவதற்கில்லை என்பதைக் காட்டும். இது நியாயத்தோடு தொடர்பற்றது. இது ஒரு சமூக, அரசியல் அல்லது இராணுவம் சார்ந்த பிரச்சினையாகும். இதில் பாவத்திற்கு இடமில்லை.
இரண்டாவது கருத்தாக முஸ்லிம் லீக் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது அல்ல என்றும், பாகிஸ்தான் என்பது ஜின்னாவின் கற்பனை என்றும், திரு. காந்தி பிரிவினையை எதிர்க்கும் வகையில் கூறிவருகிறார். ஜின்னா முஸ்லிம் மக்கள் கூட்டத்தில் பெற்றுள்ள செல்வாக்கையும் நாளுக்குநாள் அவர் எல்லாச் சக்திகளையும் ஒன்றுதிரட்டி ஒரு போருக்கு ஆயத்தமாகி வருவதையும் திரு. காந்தி எவ்வாறு அறியாமல் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை. இதற்கு முன் திரு. ஜின்னா மக்கள் தலைவராக இருந்ததில்லை. அவர் மக்கள்மீது அவநம்பிக்கையே கொண்டிருந்தார்.1 எளிய மக்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த அவர் உயர்வகுப்பு வாக்குரிமையையே வற்புறுத்தினார். ஜின்னா எப்போதும் சமயப் பற்றும், ஆன்மீக ஈடுபாடும் கொண்டவராகவோ, இஸ்லாத்தை எடுத்துரைப்பவராகவோ இருந்ததில்லை. அவர் சட்டமன்ற உறுப்பினராகும்போது புனித குரானை முத்தமிடுவார். அவர் அந்த நூலின் உள்ளடக்கத்தையோ, சிறப்பான தத்துவக் கூறுகளையோ அறியக் கவலைப்பட்டதில்லை. தன் ஆர்வத்தின் காரணமாகவோ, சமய உணர்வின் காரணமாகவோ அவர் பள்ளிவாசலுக்கு அடிக்கடி சென்றவரில்லை. முஸ்லிம்களின் சமயக் கூட்டங்களிலோ, அரசியல் கூட்டங்களிலோ எளிய மனிதர்களிடையேயோ அவர் எப்போதும் காணப்பட்டதில்லை. இன்று திரு. ஜின்னாவிடம் முழுமாற்றம் காணப்படுவதை நாம் பார்க்கலாம். அவர் எளிய மக்களின் மனிதராக மாறியுள்ளார். அவர் அவர்களுக்கு மேலானவராக இப்போது இல்லை. அவர் அவர்களிடையில் இருக்கிறார். அவர்கள் தங்களுக்கு மேலாக அவரைக் கொண்டு ‘காய்தே ஆஸம்‘ என்று அழைக்கின்றனர். அவர் இஸ்லாத்தில் நம்பிக்கை உடையவராக மட்டுமன்றி அதற்காக இறந்துவிடவும் தயாராக இருக்கிறார். இன்று அவர் ‘கலாமா’வைவிட இஸ்லாத்தை அதிகம் அறிந்துள்ளார். இன்று அவர் ‘குத்பா’ கேட்கப் பள்ளிவாசலுக்குச் செல்கிறார்; பெருநாள் கூட்ட வழிபாட்டில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறார். டோங்கிரி, நுல்பஜார் ஒரு காலத்தில் அவர் பெயரை மட்டுமே அறியும். இன்று அவர் உருவத்தை அறிந்துள்ளன. பம்பாயில் எந்த முஸ்லிம் கூட்டமும் “அல்லாஹோ அக்பர்” என்றும் “காய்தே ஆஸம் நீடு வாழ்க” என்றும் கூறாமல் தொடங்குவதோ முடிவதோ இல்லை. இவ்வகையில் திரு.ஜின்னா இங்கிலாந்தின் மன்னர் முதலாம் சார்லஸின் மகிழ்ச்சியற்ற மாமனாகிய பிரான்ஸின் நான்காம் ஹென்றியை அப்படியே பின்பற்றுகிறார். நான்காம் ஹென்றி சமய நம்பிக்கையில் சீர்திருத்தக் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தவர். ஆனால், அவர் பாரீஸிலுள்ள கத்தோலிக்கத் திருக்கோயிலில் மக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தயங்குவதில்லை. பாரீஸின் வலிமையான ஆதரவைப் பெற தன் சமய நம்பிக்கையைக் கைவிட்டுப் பொதுமக்களின் கூட்டத்திற்குச் செல்வது ஒரு சிறிய விலை என்று அவர் கருதினார். நான்காம் ஹென்றிக்குப் பாரீஸ் மக்களைப் போல, திரு.ஜின்னாவுக்கு டோங்கிரியும், நுல்பஜாரும். இது ஒருவித உத்தியேயாகும்; மக்களை அணிதிரட்டலே ஆகும். திரு.ஜின்னா பகுத்தறிவிலிருந்து மூடநம்பிக்கையில் ஆழ்கிறார் என்று கருதினாலும், அவர் தன் குறிக்கோளுடன் மூழ்குகிறார்; அவர் தன் மூழ்குதலால், முஸ்லிம் சமூகத்தின் எல்லாத் தளங்களுக்கும் பரவுகிறார்; முஸ்லிம் சமூகத்தின் மன உருவாக்கத்தில் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறார். இது மிகவும் தெளிவானதாகும். திரு.காந்தி கொண்டுள்ள அசாதாரணமான கருத்துக்கு ஓர் அடிப்படையாக இருப்பவர்கள் தேசிய முஸ்லிம்கள். முஸ்லிம் லீக்கைச் சார்ந்த வகுப்புவாத முஸ்லிம்களுக்கும் தேசிய முஸ்லிம்களுக்கும் இடையில் உண்மையான வேறுபாட்டைக் காண்பது கடினம். தேசிய முஸ்லிம்களை முஸ்லிம் லீக்கிலிருந்து வேறுபடுத்திக்காணும் அளவுக்கு காங்கிரஸோடு அவர்களுக்கு என்ன இன உணர்வு, குறிக்கோள், மற்றும் கொள்கை இருக்கக்கூடும் என்பது ஐயமாக உள்ளது. உண்மையில் காங்கிரஸ்காரர்கள், இரண்டிற்கும் இடையே வேறுபாடு இல்லை என்றும் காங்கிரஸிலுள்ள தேசிய முஸ்லிம்கள் வகுப்புவாத முஸ்லிம்களின் புறக்காவற்படையினரே தவிர வேறல்ல என்றும் கருத்துக் கொண்டுள்ளனர். இக்கருத்து மறைந்த அன்சாரியை நினைவுபடுத்திப் பார்த்தால் உண்மைக்கு மாறானது அன்று என்பது விளங்கும். தேசிய முஸ்லிம் தலைவரான அன்சாரி, காங்கிரஸூக்கும் தேசிய முஸ்லிம்களுக்கும் மாறாக முஸ்லிம்களுக்குத் தனித்தேர்தல் தொகுதிகளைக் கொடுத்த வகுப்புத் தீர்ப்பை எதிர்க்க மறுத்துவிட்டார்.
இன்னும் சொல்லப்போனால், முஸ்லிம்களிடையே லீக்கின் செல் வாக்கு அதிகரித்துள்ளது. லீக்கை எதிர்த்த முசல்மான்கள் பலர் லீக்கில் இடங்கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டனர் அல்லது அதனோடு உடன்பாடு செய்துகொள்ளச் செய்யப்பட்டனர். மறைந்த சிக்கந்தர் ஹயத்கான், வங்காளத்தின் பிரதமராக இருந்து மறைந்த பஸ்லுல் ஹக் ஆகியோர் அடித்த குட்டிக்கரணங்களைக் கணக்கில் கொள்வோர் யாரும் இந்த உண்மையை உணர்வர். திரு.ஜின்னா 1937இல் முஸ்லிம் லீக்கின் கிளைகளை மறுபடியும் கொண்டுவர முயன்றபோது தங்கள் மாநிலத்தில் அவற்றை ஏற்படுத்த சர் சிக்கந்தரும் பஸ்லுல் ஹக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் பஞ்சாபிலும் வங்காளத்திலும் தொடங்கப்பட்ட ஓராண்டிற்குள் இருவரும் லீக்கில் சேருமாறு வற்புறுத்தப்பட்டனர். இரைதேடிச் சென்றவர்கள் தாங்களே இரையான கதைதான் இது. லீக்கின் வெற்றிக்கு இதற்குமேல் தொடர்புடைய ஆதாரம் தரத் தேவையில்லை.
இதனைத் தாங்கும் ஆற்றலின்றி திரு.காந்தி, திரு.ஜின்னாவுடனும் முஸ்லிம் லீக்குடனும் ஓர் உடன்பாட்டுக்கு வரப் பேச்சுவார்த்தை நிகழ்த்தாமல், ஒரு மாறுபட்ட முடிவை மேற்கொண்டார். 1942 ஆகஸ்டு எட்டாம் நாளன்று அவர் காங்கிரஸைப் புகழ்பெற்ற “வெள்ளையனே வெளியேறு” தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தார். இந்தத் தீர்மானம் முதல்நிலையில் வெள்ளை அரசுக்கு ஓர் அறைகூவலாகும். ஆனால், இது உண்மையில் சிறுபான்மையினர் பற்றிய விவாதத்தில் பிரிட்டிஷ் அரசின் தலையீட்டை நீக்கும் முயற்சியுமாகும். இதன் மூலம் சிறுபான்மையினர் பிரச்சினைக்கு காங்கிரஸ் தனக்குரியவகையிலும், தன்னுடைய நோக்கிற்கு ஏற்பவும் தீர்வு காணும் உரிமையை அதற்குப் பெற்றுத்தரும் முயற்சியாக அது அமைந்திருந்தது. முஸ்லிம்களையும் இதர சிறுபான்மையினரையும் ஓரங்கட்டிவிட்டுச் சுதந்திரத்தைப் பெறும் முயற்சியாகவும் கருத்தில் இல்லாவிடினும் நடைமுறையில் இருந்தது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் ஒரு தோல்வியாக முடிந்தது. அது ஒரு பைத்தியக்காரத்தனமான முயற்சியாக அமைந்து ஒரு பேய்த்தனமான வடிவை எடுத்தது. அதில் கொள்ளை, சூறை, கொலை போன்றவற்றிற்கு இந்தியர்கள் பலியானார்கள்; அதில் குற்றமிழைத்தவர் காங்கிரஸ்காரராவர். இம்முயற்சியில் தோல்வியுற்ற அவர் அதிலிருந்து மீள்வதற்கு 1943 மார்ச்சில் 21 நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
இதிலும் அவர் தோல்வியடைந்தார். அதன்பிறகு அவர் நோய்வாய்ப்பட்டார். அவர் நலம் குன்றுகின்றார் என்று அறிந்தவுடன் சிறையில் இறந்துபட்டால் தமக்கு இழிவுவரும் என்று கருதிய பிரிட்டிஷ் அரசு அச்சத்தால் அவரை விடுதலை செய்தது. சிறையிலிருந்து வெளிவந்தவுடன் தானும், காங்கிரஸும் பேருந்தைத் தவறவிட்டது மட்டுமல்லாமல் சாலையையே இழந்துவிட்டதை அறிந்தார். தமது தகுதியைத் தக்கவைத்துக்கொள்ளவும், இந்தியாவின் பெரிய கட்சியான காங்கிரஸ் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் தோல்வி காரணமாகவும், அதனோடு இணைந்த வன்முறை காரணமாகவும் இழந்துவிட்ட மதிப்பைப் பெறவும் அவர் வைசிராயுடன் பேச்சுவார்த்தைத் தொடங்கினார். அம்முயற்சியில் ஏமாற்றமடைந்த நிலையில் திரு.காந்தி, திரு.ஜின்னாவை நோக்கித் திரும்பினார். அவர் திரு.ஜின்னாவைச் சந்தித்து வகுப்புச் சிக்கல் குறித்து 1944 ஜூலை 17 அன்று பேச விரும்புவதாகக் கடிதம் எழுதினார். திரு. ஜின்னா பம்பாயில் தமது இல்லத்தில் காந்தியை வரவேற்கச் சம்மதித்தார். 1944 செப்டம்பர் 9ஆம்நாள் அவர்கள் சந்தித்தனர். அதனால் காந்தியிடம் அறிவின் விடியல் தோன்றியது. இதுவரை அவர் பார்க்கத் தவறிய வெளிச்சம் அவர் முகத்தில் வீச, அவர் அதனைப் பார்க்க இணங்கினார்.
1944 ஏப்ரலில் திரு. இராசகோபாலாச்சாரியாரால் திரு. ஜின்னாவிடம் சமர்ப்பித்த திட்டமே அவர்களுடைய பேச்சுக்கு அடிப்படையாக இருந்தது. இத்திட்டம் பற்றி திரு.இராசகோபாலச்சாரியார் கூறும்போது இதனைத் தாம் 1943 மார்ச்சிலேயே திரு.காந்தி சிறையில் உண்ணாவிரதம் இருந்தபோது அவருடன் விவாதித்ததாகவும், திரு. காந்தி அதற்கு முழுச் சம்மதத்தைக் கொடுத்ததாகவும் கூறுகிறார். ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. சி.ஆர்.திட்டம் என்று எல்லோரும் அறியப் பேசப்பட்ட இராசகோபாலாச்சாரியாரின் திட்ட வாசகம் வருமாறு:2
- சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பைப் பொறுத்தவரை கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு இணங்க முஸ்லிம் லீக், இந்தியாவின் சுதந்திரக் கோரிக்கையை ஏற்கிறது. மேலும், இடைப்பட்ட காலத்தில் ஓர் இடைக்கால அரசைத் தோற்றுவிப்பதில் காங்கிரஸோடு ஒத்துழைக்கவும் இணங்குகிறது.
- போர் முடிந்தபின், முகமதிய மக்கள் அறுதிப் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவின் வடமேற்கு, கிழக்குப் பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களின் எல்லைகளை வரையறுப்பதற்கு ஒரு குழு நியமிக்கப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்ட இடங்களில் வாழும் அனைத்துப் பொதுமக்களிடத்தும் வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையிலோ அல்லது நடைமுறைக்கொத்த வேறு எந்த வாக்குரிமை அடிப்படையிலோ வாக்கெடுப்பு நடத்தி இந்துஸ்தானத்திலிருந்து இப்பகுதிகள் பிரிவது பற்றி இறுதியாக முடிவு எடுக்கப்படும். பெரும்பான்மையினர் இந்துஸ்தானத்திலிருந்து பிரிந்து தனி மாநிலம் அமைப்பதென முடிவு செய்தால், அது நடைமுறைப்படுத்தப்படும். அப்போது, எல்லையில் இருக்கும் மாவட்டங்கள் இவை இரண்டில் ஏதேனும் ஓர் அரசில் சேர்ந்துகொள்வதற்கு அவற்றிற்குள்ள உரிமையைப் பாதிக்காத வகையில் அம்முடிவு எடுக்கப்படும்.
- வாக்குரிமை நிகழுமுன் எல்லாக் கட்சிகளுக்கும் தங்கள் கருத்துகளைக் கூற உரிமை வழங்கப்படும்.
- பிரிவினையின்போது, பாதுகாப்பு, வணிகம், செய்தித் தொடர்பு ஆகியவற்றையும் மற்றும் இதர அத்தியாவசிய துறைகளையும் பாதுகாப்பதற்குப் பரஸ்பர ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்படும்.
- மக்கள்தொகை இடம்மாற்றம் என்பது முற்றிலும் சுய விருப்ப அடிப்படையிலேயே அமையும்.
- முழு அதிகாரத்தையும் பொறுப்பையும் பிரிட்டன் இந்திய அரசுக்கு மாற்றிக்கொடுக்கும்போதுதான் இந்த ஒப்பந்த விதிமுறைகள் அமலுக்கு வரும்.
செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கிய பேச்சுகள் செப்டம்பர் 27 வரை மேற்கொள்ளப்பட்டு, 18 நாட்களுக்கு நடந்து இறுதியில் பேச்சு தோல்வியுற்றதாக அறிவிக்கப்பெற்றது. பேச்சுகளில் ஏற்பட்ட தோல்வி பலதிறத்து மக்களிடம் பலவேறுபட்ட விளைவுகளை உண்டாக்கியது. சிலர் மகிழ்ச்சியடைய பிறர் துயருற்றனர். ஆனால் பேச்சுக்கு முன்னர், மேலாண்மைக் குறித்த போரில் பிரிட்டிஷ்காரரால் திரு. காந்தியும் பஞ்சாப் யூனியன் கட்சியினரால் திரு. ஜின்னாவும் தங்கள் மதிப்பில் பெரும்பகுதியை இழந்திருந்தனர். பெரும்பான்மை மக்கள் சிக்கல் தீர இவர்கள் ஏதேனும் ஆக்கப்பூர்வமான தீர்வை முன்வைக்க வேண்டுமென்று எதிர்ப்பார்த்தனர். இதில் தோல்வி உண்டானதற்குத் தலைவர்களின் குறைபாடுகளே காரணமாகும். ஆனால், அடிப்படையில் சி.ஆர்.திட்டத்தில் இருந்த குறைகளே தோல்வியைத் தவிர்க்க முடியாததாக ஆக்கின என்றுகூற வேண்டும். முதல்நிலையில், அது வகுப்புப் பிரச்சினையை அரசியல் பிரச்சினையோடு சேர்த்து அவிழ்க்க முடியாத முடிச்சாக்கிவிட்டது. இத்திட்டம் அரசியல் பிரச்சினைக்கு அடிப்படையான தீர்வாகவோ, வகுப்புப் பிரச்சினைக்கு அடிப்படையான தீர்வாகவோ இல்லை. இத்திட்டம் சிக்கலுக்குரிய தீர்வு எதையும் கூறவில்லை. அது திரு. ஜின்னாவை ஒரு பேரத்துக்கு இணங்கும்படி அழைத்தது. “சுதந்திரம் பெறுவதற்கு நீங்கள் உதவினால், பாகிஸ்தான் பற்றிய உங்கள் கோரிக்கையை நாங்கள் மகிழ்ச்சியுடன் பரிசீலிப்போம்” என்ற பேரமாக அது இருந்தது. இதுதான் சுதந்திரம்பெறச் சிறந்த வழியென்ற இக்கருத்தை எங்கிருந்து திரு. இராசகோபாலச்சாரியார் பெற்றாரென்று எனக்குத் தெரியவில்லை. அவர் இந்தக் கருத்தை இந்தியாவின் பழைய இந்து அரசர்களிடமிருந்து பெற்றிருக்கலாம். பழைய இந்து அரசர்கள் பகைவர்களிடமிருந்து தங்கள் சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்ளப் பக்கத்து நாட்டு இளவரசர்களுக்குத் தங்கள் பெண்களைத் திருமணம் செய்துகொடுப்பர். இத்தகைய மண உறவுகள் ஒரு நல்ல கணவனையோ, நிரந்தர அரசியல் கூட்டையோ அளிக்கவில்லை என்பதை திரு.இராசகோபாலாச்சாரியார் மறந்துவிட்டார். இத்தகைய ஒரு விவகாரத்தில் சுதந்திரப் போரில் உதவுவதை வகுப்புப் பிரச்சினைக்கான தீர்வைச் சார்ந்திருக்கச் செய்வது அறிவுடைமையாகாது. ஒரு கட்சி மற்றொரு கட்சியை வகுப்புரிமைகள் என்ற தூண்டில் வழியே தன் வலைக்கும் இழுக்கின்ற வழியாகும் இது. சி.ஆரின் திட்டம் வகுப்புரிமைச் சிக்கல் தீர்வை விற்பனைக்குரிய பண்டமாக்கிவிட்டது.
சி.ஆர்.திட்டத்தின் இரண்டாவது குறைபாடு இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும் சாதனத்தோடு தொடர்புடையது. சி.ஆர்.திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இத்தகைய சாதனம் இடைக்கால அரசாங்கமாகும். இதனைக் கூறும்போது திரு.இராசகோபாலாச்சாரியார் இரண்டு இடையூறுகளைத் தெளிவாகக் கவனிக்கவில்லை. முதல் இடையூறு, இடைக்கால அரசு நிறுவப்பட்ட நிலையில் ஒப்பந்தம் செய்துகொண்ட கட்சிகளின் வாக்குறுதிகள் சட்டப்படி கூறுவதானால், உடனே நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகளாக இருக்கமாட்டா. ஒருபுறம் நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகளாகவும் இன்னொருபுறம் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளாகவுமே இருக்கும். இடைக்கால அரசு நிறுவுதலுக்கு ஒத்துக்கொள்வதன் மூலம் சுதந்திரம் பெறுவதில் காங்கிரஸுக்கு உதவி செய்யும் வாக்குறுதியை லீக் நிறைவேற்ற முடியும். ஆனால், பாகிஸ்தானை உருவாக்க உதவும் காங்கிரஸின் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டியதாக இருக்கிறது. வாக்குறுதிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டுமெனச் சரியாக வற்புறுத்தும் திரு. ஜின்னா, வாக்குறுதி நிறைவேற்றப்படாத சூழலில் தன்னை வைத்துக்கொள்ளச் சம்மதிக்கமாட்டார். இராசகோபாலாச்சாரியார் கவனிக்காமல் விட்டுவிட்ட இன்னோர் இடர்ப்பாடு, காங்கிரஸ் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பகுதியை இடைக்கால அரசு நிறைவேற்றத் தவறினால் யார் அதனை நிறைவேற்றுவது என்பதாகும். இடைக்கால அரசு என்பது ஒரு முழுமையான அரசு. அது எந்த மேலாண்மைக்கும் அடங்கியதன்று. ஒப்பந்தத்தை நிறைவேற்ற அதற்கு விருப்பமில்லாவிட்டால் முஸ்லிம்களுக்கு உள்ள ஒரே வழி கிளர்ச்சியில் இறங்குவதேயாகும். பாகிஸ்தானை அமைப்பதற்காக இடைக்கால அரசு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க அனுமதிக்கப்படுவதை எவரும் ஒப்புக்கொள்ளார். அது ஒரு சூழ்ச்சியே தவிரத் தீர்வன்று. பிரிட்டிஷ் இந்தியாவின் தேசிய வாழ்வின் முக்கிய பகுதிகளால் ஒத்துக்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகளுக்கு உரு வழங்கக்கூடிய நாடாளுமன்றச் சட்டத்தின் வழியாகச் சட்டமன்றங்களைக் கொண்டுவருவதே ஒரே வழியாகும். வேறு வழியொன்றும் இல்லை.
சி.ஆர்.திட்டத்தில் மூன்றாவதாகக் குறை ஒன்று உள்ளது. அது பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே பொது ஈடுபாட்டிற்குரிய பாதுகாப்பு, வெளிவிவகாரம், சுங்கம் முதலியவற்றைப் பாதுகாக்க ஒப்பந்தம் செய்துகொள்ளும் ஏற்பாடு குறித்ததாகும். இங்கும் திரு.இராசகோபாலாச்சாரியார் தெளிவாக இடையூறுகளை எண்ணியதாகத் தெரியவில்லை. பொதுநலன்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எப்படிப் பாதுகாக்கப்படக் கூடும்? நான் இதற்கு இருவழிகளையே காணுகிறேன். ஒன்று இத்தகைய விஷயங்கள் சம்பந்தமாக நிர்வாக அதிகாரமும் சட்டம் இயற்றும் அதிகாரமும் படைத்த ஒரு மத்திய அரசை நிறுவுவது. இதன் பொருள் பாகிஸ்தானும் இந்துஸ்தானும் முழுமையான அரசுகள் ஆகமாட்டா. திரு. ஜின்னா இதற்கு ஒப்புக்கொள்வாரா? தெளிவாக அவர் இதற்கு ஒப்புக்கொள்ளமாட்டார். மற்றொருவழி பாகிஸ்தானையும் இந்துஸ்தானையும் முழுமையான அரசுகளாக்கி, இத்தகைய பொதுநலன்கள் விஷயத்தில் இரண்டையும் ஓர் ஒப்பந்தவழிக் கட்டுப்படுத்தலாகும். ஆனால், ஒப்பந்தக் கூறுகளை அவர்கள் கடைபிடிப்பார்கள் என்று கூற என்ன உறுதி உள்ளது? தனி அரசுரிமை படைத்த நாடு என்ற முறையில், அது குடியேற்ற நாடாக இருந்தாலும் பாகிஸ்தான் அதனை மறுக்கக்கூடும். திரு.இராசகோபாலாச்சாரியார் இந்தப் பிரிவை உருவாக்குவதற்குரிய அடிப்படையை 1922இல் இங்கிலாந்தும் அயர்லாந்தும் செய்துகொண்ட ஒப்பந்தத்திலிருந்து பெற்றிருக்கலாம். ஆனால், அந்த ஒப்பந்தம் அயர்லாந்து தனியுரிமை பெறும்வரையில் இருந்ததென்பதையும் தனியுரிமை பெற்றபின் அது அவ்வொப்பந்தத்தை மறுத்துவிட பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் மௌனமாக இருந்தது என்பதையும் திரு.இராசகோபாலாச்சாரியார் மறந்துவிட்டார்.
பேச்சுகள் தோல்வியடைந்தது பற்றி யாரும் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. ஆனால், கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் திரு. ஜின்னா தனியாகப் பேசும்போது வெளிப்படையாகக் கருத்துகளைத் தெரிவிப்பதும், பொது மேடைகளில் அவற்றைக் குறித்து மௌனம் சாதிப்பதும், சில விஷயங்கள் குறித்த ஒரு தெளிவான கருத்தை இப்பேச்சுவார்த்தைகள் நமக்குத் தரத் தவறிவிட்டன என்பதுமேயாகும். இத்தகைய விஷயங்கள் வருமாறு:
- முஸ்லிம் லீக்கின் தீர்மானத்திற்காகப் பாகிஸ்தான் ஒத்துக்கொள்ளப்பட வேண்டுமா?
- முஸ்லிம் லீக்கைச் சாராத முஸ்லிம்கள் இதில் சொல்வதற்கு உரிமையில்லையா?
- பாகிஸ்தானின் எல்லைகள் எப்படிப்பட்டவையாக இருக்கும்? இந்த எல்லைகள் பஞ்சாப், வங்காள மாநிலங்களின் நிர்வாக எல்லையாக இருக்குமா அல்லது இன அடிப்படையிலான எல்லையாக இருக்குமா?
- ”தேவைப்படும் எல்லைகள் குறித்துச் சரிசெய்து கொள்வதற்கு உட்பட்டு” என்ற லாகூர் தீர்மானத்தில் காணப்படும் சொற்களின் பொருள் யாது? லீக் தன் மனத்தில் கொண்டுள்ள பிரதேச சீரமைவுகள் என்ன?
- லாகூர் தீர்மானத்தின் கடைசிப் பகுதியில் காணப்பெறும் ‘இறுதியாக’ என்ற சொல்லின் பொருள் யாது? லீக், பாகிஸ்தான் சுதந்திரமான தனிநாடாக இல்லாத ஓர் இடைக்காலம் பற்றி எண்ணுகிறதா?
- தற்போதுள்ள நிர்வாக எல்லைகளே கிழக்கு மற்றும் மேற்குப் பாகிஸ்தானது எல்லைகளாக இருக்க வேண்டுமென்பதே திரு. ஜின்னாவின் திட்டமென்றால், பஞ்சாபிலும் வங்காளத்திலும் வசிக்கும் ஷெட்யூல்டு வகுப்பினரும் இதர முஸ்லிம் அல்லாதாரும் திரு. ஜின்னாவின் பாகிஸ்தானில் இருக்க விரும்புகிறார்களா என்பதைப் பொது வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க அவர் அனுமதிப்பாரா? பஞ்சாபிலும் வங்காளத்திலுமுள்ள முஸ்லிமல்லாதோரின் வாக்கெடுப்பு முடிவுகளுக்கு திரு.ஜின்னா கட்டுப்பட்டு நடந்துகொள்வாரா? மேற்குப் பாகிஸ்தானையும் கிழக்குப் பாகிஸ்தானையும் இணைப்பதற்காக ஐ.மாகாணம் பீகார் வழியே செல்லும் ஓர் ஊடுவழியை திரு. ஜின்னா கோருகிறாரா? இது சம்பந்தமான கேள்விகளை திரு. ஜின்னாவிடம் நேரடியாக முன்வைத்து அவற்றிற்குத் தெள்ளத் தெளிவான பதில்களைப் பெற்றிருந்தால் அது பெரிதும் பயனுள்ளதாக இருந்திருக்கும். இந்தப் பிரச்சினைகளில் திரு.ஜின்னாவின் மனத்தை, உண்மையான நிலையை அறிய முயலாமல், சி.ஆர்.திட்டம் பெருமளவுக்கு லாகூர் திட்டத்தை ஒத்தது என்பதை மெய்ப்பிப்பதிலேயே திரு. காந்தி தமது முழு நேரத்தையும் வீணாகச் செலவிட்டு, இந்தப் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்திக்கொள்வதற்குக் கிட்டிய மிகச் சிறந்த வாய்ப்பை இழந்துவிட்டார்.
இப்பேச்சுவார்த்தைகளின் பின், காந்தியும் ஜின்னாவும் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் தங்கள் ஆட்டம் முடிந்தவுடன் இருக்கைக்குத் திரும்புவதுபோல் இனி வேறொன்றும் செய்வதற்கில்லையென்பதுபோலத் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிவிட்டனர். அவர்கள் திரும்பச் சந்திப்பார்கள் என்பதற்கோ எப்போது சந்திப்பார்கள் என்பதற்கோ குறிப்பில்லை. அடுத்து என்ன என்ற கேள்வி அவர்களைத் தொல்லைப்படுத்துவதாக இல்லை. எனினும் இந்தியாவின் முன்னேற்றம் எந்தச் சிக்கலைத் தீர்த்தால்தான் ஏற்படுமோ அந்தச் சிக்கல் குறித்து விவாதிக்க மறுத்தால் இந்தியா எப்படி முன்னேறும்? மக்கள் ஏற்கிறார்கள் அல்லது மறுக்கிறார்கள் என்ற வகையைச் சார்ந்தன்று இப்பிரச்சினை, தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினை இது. எப்படி? உடன்பாடு அல்லது தம் மனப்போக்கின்படி அது அமைய வேண்டும். உடன்பாட்டின் வழி சிக்கலைத் தீர்ப்பதென்றால், ஒன்றிற்கொன்று தாழ்ந்துபோகாத வகையிலான பேச்சுவார்த்தை வழி, விட்டுக்கொடுத்து முடிவு காண்பதாக இருக்க வேண்டும். ஒருவர்க்கு மற்றவர் தாழ்ந்துபோய்ச் செய்துகொள்வது ஒப்பந்தமன்று. அது சர்வாதிகாரம். இறுதியில் நல்லுறவு நிலவ இருசாரரும் உடன்பாட்டுக்கு வரவேண்டும். ஆனால், உடன்பாடு என்பது காலங்கடத்துகின்ற வழியாக மாறக்கூடும். அது நல்லெண்ணத்தை உண்டாக்க அதிகக் காலம் பிடிக்கும். எவ்வளவு காலமாகும் என்று கூறமுடியாது. இந்தியாவின் அரசியல் சுதந்திரம் என்பது ஓர் உடனடித் தேவையாகும். அது ஒத்திப்போட முடியாதது; அதே சமயத்தில் வகுப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் அதனை வேகப்படுத்த முடியாது. இந்தியாவின் சுதந்திரத்தை, உடன்பாட்டைச் சார்ந்திருக்கச் செய்வது அதற்கான தீர்வைக் காலவரையறையின்றி ஒத்திப் போடுவதாகும். வேறு ஏதேனும் விரைவான ஒருமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும். ஓர் சர்வதேசக் குழுவில் மத்தியஸ்தம் செய்யப்படுவது சாலச்சிறந்த வழியாக எனக்குப் படுகின்றது. பாகிஸ்தான் உள்ளிட்ட விவாதத்திற்குட்பட்ட சிறுபான்மையரின் பிரச்சினைகள் இக்குழுவிற்கு அனுப்பப்படலாம். இக்குழுவின் உறுப்பினர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு வெளியேயிருந்து பெறப்பட்டவர்களைக் கொண்டு அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவிற்கு, இந்தியாவின் சட்டப்படியான சிறுபான்மைக் குழுக்களான முஸ்லிம்கள், ஷெட்யூல்டு வகுப்பினர், சீக்கியர்கள், இந்திய கிறித்தவர்கள் ஆகிய ஒவ்வொரு பிரிவினரும் ஒரு நியமன உறுப்பினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பக் கேட்டுக்கொள்ளப்பட வேண்டும். இந்தச் சிறுபான்மையர் இந்துக்களைப் போலவே தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்கக் குழுவின் முன் வரவேண்டும். குழு வழங்கும் முடிவை ஏற்றுக்கொள்ள இசைய வேண்டும். பிரிட்டிஷ்காரர்கள் கீழ்க்கண்ட உறுதிமொழிகளைத் தரவேண்டும்:
- அவர்கள் வகுப்புத் தீர்வு விஷயத்தில் தலையிடமாட்டார்கள். அது உடன்பாட்டிற்கோ, மத்தியஸ்தக் குழுவுக்கோ விடப்படும்.
- வகுப்புப் பிரச்சினையில் மத்தியஸ்தக் குழுவின் முடிவை இந்திய அரசு சட்டத்தில் இடம்பெறச்செய்து பிரிட்டிஷார் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- சர்வதேச மத்தியஸ்தக் குழு அளிக்கும் தீர்ப்பை இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் விஷயத்தில் தங்களுக்குள்ள கடமை பொறுப்புகளைப் போதிய அளவு நிறைவேற்றிவிட்டதற்கு அடையாளமாக அவர்கள் கருத வேண்டும். இந்தியாவுக்குக் குடியேற்ற நாட்டு அந்தஸ்து வழங்க இணக்கம் தெரிவிக்க வேண்டும்.
இந்த நடைமுறை பல நன்மைகளைக் கொண்டது. இது பிரிட்டிஷ் அரசு வகுப்புத் தீர்வில் தலையிடுமோ என்ற அச்சத்தை அகற்றுகிறது. இந்த அச்சத்தைக் காரணங்காட்டியே காங்கிரஸ் கட்சி வகுப்பு சிக்கலைத் தீர்க்கவில்லை. சிறுபான்மையினர் காங்கிரஸிடமிருந்து பெறக்கூடியதைவிடவும் பிரிட்டிஷாரிடமிருந்து அதிகமான நன்மைகளைப் பெற்றுவிடக் கூடுமென்றும், எனவே சிறுபான்மையர் காங்கிரஸுடன் உடன்பாட்டுக்கு வர விரும்பவில்லையென்றும் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இரண்டாவது நன்மை ஒன்றுண்டு; அதாவது, அரசியலமைப்புப் பிரச்சினையைச் சிறுபான்மையினரின் அங்கீகாரத்திற்கு உட்படுத்துவதன் மூலம் இந்தியாவின் அரசியலமைப்பு முன்னேற்ற விஷயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் சிறுபான்மையினருக்கு ரத்து அதிகாரத்தை அளித்திருக்கிறது என்ற காங்கிரஸின் ஆட்சேபத்தை இது அகற்றுகிறது. சிறுபான்மையினர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வெறும் கைப்பொம்மைகளாகச் செயல்பட்டுவருகிறார்கள் என்ற ஐயம் காங்கிரஸுக்கு இருந்து வருவதால் ஒன்று அவர்கள் நியாயமற்ற முறையில் தமது சம்மதத்தை அளிக்காதிருக்கக்கூடும் அல்லது பிரிட்டிஷ் அரசாங்கத்தை அதன் அங்கீகாரத்தை அளிக்காதபடி அதனை நிர்ப்பந்திக்கக் கூடும் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இவ்விதம் குற்றம்சாட்டுவதற்கான எல்லாவித அடிப்படைகளையுமே சர்வதேச மத்தியஸ்தம் அறவே அகற்றுகிறது. மேலும், சிறுபான்மையினரின் ஆட்சேபத்துக்கும் எவ்வித இடமில்லாமல் போகிறது. அவர்களுடைய கோரிக்கைகள் நியாயமும் நேர்மையும் உடையனவாக இருக்கும் நிலையில் மத்தியஸ்த குழுவிற்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. மத்தியஸ்த குழு ஒன்றிற்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. எந்த மனிதனும் தன்னுடைய வழக்கிற்குத் தானே நீதிபதியாக அனுமதிக்க முடியாது என்ற நன்கறியப்பட்ட விதியை இந்த முறை பின்பற்றுகின்றது. சிறுபான்மையினரின் விஷயத்தில் எந்த விதிவிலக்கையும் கொண்டுவரக் காரணமில்லை. ஒரு தனிமனிதனைப் போலவே அது தன்னுடைய சொந்த விஷயத்தில்தானே நீதிபதியாக இருக்க அனுமதிக்க முடியாது. ஆனால், பிரிட்டிஷ் அரசின் நிலை என்ன? பிரிட்டிஷ் அரசு இந்தத் திட்டத்தின் எப்பகுதியையும் மறுக்கக் காரணமில்லை. வகுப்புத் தீர்ப்பு பிரிட்டனுக்குக் கடும்பழி சேர்த்திருக்கிறது. பிரிட்டிஷாருக்கு இது ஒரு பயனற்ற பணி; இதிலிருந்து அவர்கள் விடுபடுவது நல்லது. அரசுப் பொறுப்பிலிருந்து பிரிட்டிஷார் விடுபடுமுன் அவர்களைப் பாதுகாவலர்களாகக் கருதி ஒப்படைக்கப்பட்ட சில வகுப்புகளின் நலத்தையும் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு செயல்படுவது அவர்களுடைய பொறுப்பல்லவா? ஒரு சர்வதேச மத்தியஸ்தக் குழுவின் தீர்ப்பின் அடிப்படையில் அமைந்த பாதுகாப்புகளை அரசியல் சட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும். மத்தியஸ்தக் குழுவின் தீர்ப்பைச் செயல்படுத்தும் விஷயத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு ஒரே ஒரு நிகழ்ச்சி சிறிது இடையூறு தரக்கூடும். அத்தகைய நிகழ்ச்சி, குழுவின் முன் எந்த வகுப்பேனும் தங்கள் கட்சியை எடுத்துரைக்காத நிலையிலேயே எழக்கூடும். அந்த நிலையில் எழக்கூடிய வினா, பிரிட்டிஷ் அரசு குழுவின் ஆணையை அக்குறிப்பிட்ட வகுப்புக்கு எதிராக நடைமுறைப்படுத்துவதை நியாயப்படுத்துமா?
பிரிட்டிஷ அரசுக் குழுவின் ஆணையை முற்றிலும் நியாயமாக அக்கட்சிக்கு எதிராக நடைமுறைப்படுத்தும் என்றே நான் கருதுகிறேன். குழுவிற்கு முன் தன் கருத்தை எடுத்துரைக்காத கட்சியின் தகுதி என்னவாக இருக்கும்? அத்தகைய கட்சி ஒருவம்புச் சண்டைக்காரக் கட்சியே ஆகும். ஒரு வம்புச்சண்டைக்காரர் எப்படி நடத்தப்படுவார்? தடுப்பு நடவடிக்கைகளுக்கு அவர் உள்ளாக்கப்பட வேண்டும். குழுவின் முடிவே அரசியலமைப்புச் சட்டத்திற்குள் கொண்டுசென்று நடைமுறைப்படுத்துவது, இணங்காத வம்புச் சண்டைக்காரரைத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்குவதை ஒத்ததேயாகும். தேவையேற்படின் பிரிட்டிஷ் அரசு அத்தகைய நடவடிக்கையில் இறங்கத் தயங்க வேண்டியதில்லை. இத்தகையவர்களோடு மேற்கொள்ள வேண்டிய சரியான நடைமுறை இதுவே. முசோலினி அபிசீனியாவிற்கு எதிராகத் தன் வழக்கை நடுவர் தீர்ப்புக்கு முன்கொண்டுவர மறுத்தபோது சர்வதேசச் சட்டம் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளைத்தான் மேற்கொண்டது. நான் சொல்லியிருப்பது வினாவிற்குரிய விடையாக இல்லாமல் இருக்கலாம். அடுத்து என்ன? வேறு என்னவாக இருக்குமென எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் இதற்கு ஒரு விடை இல்லாமல் இந்தியாவுக்கு விடுதலை இல்லை என்பதே. அந்த விடை முடிவானதாக இருக்க வேண்டும்; சரியானதாக இருக்க வேண்டும்; தொடர்புடைய பிரிவினருக்கு நிறைவளிப்பதாக இருக்க வேண்டும்.
குறிப்புகள்
- பண்டிட் ஜவஹர்லால் நேரு தன் சுயசரிதையில், காங்கிரஸ் பள்ளியிறுதித் தேர்வு பெற்றவர்களையே உறுப்பினராகக் கொள்ள வேண்டுமென்று ஜின்னா விரும்பினார் என்று கூறியுள்ளார்.
- இந்தத் திட்டம் குறித்து 1943 மார்ச்சில் காந்தியுடன் விவாதிக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 1944 வரை அது ஜின்னாவுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.