24
இந்திய / தமிழக வரலாற்று நூல்களில் சொல்லப்படாத அரசுகளும் அரசர்களும் அதிகம். அளவுக்கதிகமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டவர்களும் முற்றிலும் கைவிடப்பட்டவர்களும் இருக்கிறார்கள். போகிறபோக்கில் சொல்லப்பட்ட முக்கியமானவர்களும் உண்டு. அந்த வகையில் போகிற போக்கில் சொல்லப்பட்ட முக்கியத்துவம் பொருந்திய மரபு நந்தர்களுடையது. நந்தன் என்ற பெயர் கொண்ட மன்னரால் தோற்றுவிக்கப்பட்டு, அதே பெயரைக் கொண்ட அரசர்களின் மரபு என்பதால் நந்த மரபு என்றும், அவர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதி நந்தப் பேரரசு என்றும் குறிப்பிடப்படுகிறது.
நந்தன் அல்லது மகாபதும நந்தன் என்பது இம்மரபில் உருவான முதல் மன்னனின் பெயர். மகாபதுமன் என்பதைப் பெயர் அல்லது விருது என்று கூறுவர். நந்தன் என்பது மரபின் பெயர். முதல் அரசனுக்குப் பின் வந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பெயருக்குப் பின் இப்பெயரைச் சூடியிருப்பர். பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு இவர்கள் ஆண்ட பகுதி மகதப் பேரரசு என்றழைக்கப்படுகிறது. இவர்களைப் பற்றிக் குறிப்பிடும் எல்லா வரலாற்றாசிரியர்களும் நந்தர்கள் பிரபலமாகாதவர்களாக இருந்தனர் என்பதையும், அவர்களின் இடத்தை வரலாற்றில் முக்கியத்துவப்படுத்தவில்லை என்பதையும் ஒத்துக்கொள்கின்றனர். பல்வேறு மரபினரால் வழங்கப்படும் கதைகளிலும், வழக்காற்றுக் கதைகளிலும் நந்தர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவை பெரும்பாலும் புராணிகத் தன்மையில் அமைந்துள்ளன. சாணக்கியர் பற்றிய புராணிகக் கதைகளில் நந்த மன்னர் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பௌத்தம், ஜைன, காஷ்மீரி, சமஸ்கிருதம் ஆகிய நான்கு தரப்பினரால் வழங்கப்படும் சாணக்கியர் கதைகளில் பல்வேறு வேறுபாடுகளோடு நந்தர்களின் கதை இடம்பெறுகிறது. பாலியில் அமைந்த மகாவம்சத்தை ஒட்டி பௌத்தத்திலும், காஷ்மீரி தரப்பாக கதாசரித சாகராவிலும், ஜைனத்தில் ஹேமச்சந்திரன் எழுதிய பரிஷிஸ்ட்டிலும், விசாகததா என்ற சமஸ்கிருத நாடகத்திலும் நந்தர்களின் வீழ்ச்சி நாடகிய அம்சங்களோடு சொல்லப்பட்டுள்ளது. இக்கதைகள் அடிப்படையில் நந்தர்கள் 154 வருடங்கள் ஆண்டனர் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஜைனர் கதைகள் இரு நூற்றாண்டுக் காலம் என்கின்றன. சிங்கள பௌத்த ஏடுகள் 22 வருடங்கள் என்கின்றன. அது முதல் நந்தனான மகாபதுமனின் காலத்தை மட்டுமே குறிக்கும் என்று கருதுவோரும் இருக்கின்றனர்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





