வடகாடு: கதை எழுதும் காவல்துறை

அறிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பின்பு பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றத்தைச் சுமத்தி அறிக்கையைச் சமர்ப்பித்தது தமிழ்நாடு காவல்துறை. அந்த வழக்கு தற்போது புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் அதே வேளையில், மீண்டும் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு, திருவள்ளுவர் நகர் ஆதிதிராவிடர் சமூக மக்கள் மீது அங்கு பெரும்பான்மையாக இருக்கக்கூடிய முத்தரையர் சாதியைச் சேர்ந்தவர்கள் 05.05.2025 அன்று கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினர்.

நீலம் பண்பாட்டு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் உதயா தலைமையில் கள்ளக்குறிச்சி வெங்கடேஷ், புதுக்கோட்டை முருகானந்தம், வழக்கறிஞர் சசிக்குமார், விழுப்புரம் தாமோதரன், இலஞ்சி அ.கண்ணன், நீலம் சோசியல் சாமுவேல் உள்ளிட்டோர் உடனடியாகப் புதுக்கோட்டை விரைந்தனர். காவல்துறையும் சமூக விரோதிகளும் கொடுத்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்ட நடவடிக்கைகளுக்கு உடன் இருந்ததோடு, அங்குள்ள களச் சூழலை ஆய்வு செய்ததின் அடிப்படையில், கோரிக்கைகள் அடங்கிய ஆய்வறிக்கையை நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டது.

கதையெழுதும் காவல்துறையைக் கண்டித்தும், கள நிலவரப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நீலம் பண்பாட்டு மையத்தின் அறிக்கை.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு, திருவள்ளுவர் நகரில் வசிக்கக்கூடிய ஆதிதிராவிடர் சமூக மக்கள் மீது அப்பகுதியில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய முத்தரையர் சாதியைச் சேர்ந்தவர்கள் 05.05.2025 அன்று தாக்குதலை நிகழ்த்தினர்.

இக்கொடூரமான தாக்குதலில் ஆறு பெண்கள், ஒன்பது ஆண்கள் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் மனோஜ் என்கிற இளைஞனின் தலையில் ஒன்பது தையல் போடப்பட்டிருக்கிறது. மனோஜை சிகிச்சைக்காகக் கூட்டிச் சென்ற தீபன் (26) மீதான தாக்குதலில் அவரின் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மனோஜின் தாயார் பானுமதியும் தாக்கப்பட்டு உள்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், வடகாடு ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் புகுந்து இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவற்றை எரித்ததோடு, ஆஸ்பெஸ்டாஸ் போடப்பட்ட வீடுகள் உடைக்கப்பட்டிருக்கின்றன, கூரை வீடு முற்றிலுமாக எரிக்கப்பட்டிருக்கிறது. எரிக்கப்பட்ட மூன்று இருசக்கர வாகனங்களைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட (05.05.2025) இரவே காவல்துறையினர் தடயம் தெரியாமல் அகற்றியிருக்கின்றனர்.

தாக்குதலுக்கான காரணம்

வடகாடு திருவள்ளுவர் நகர் ஆதிதிராவிடர் மக்களுக்கு நரிக்கன் கரை, கட்டாரி கரை, கட்டக்காத்தான் கரை, கொங்காணி கரை, வத்திரான் கரை என ஐந்து கரைகள் இருக்கின்றன. இதில் முதல் மூன்று கரைகளைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான இடத்தில், 0.33 ஏர் பரப்பளவில் ‘அடைக்கலம் காத்த அய்யனார்’ கோயில் இருக்கிறது. அக் கோயில் நிலத்தை ஆக்கிரமிக்க கடந்த பத்து ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள முத்தரையர் சமூகத்தினர் முயற்சித்துவருகின்றனர்.

அதற்கு முன்னதாக, அக் கோயில் நிலம் வடகாடு காவல் நிலையத்திற்குச் சொந்தமானது என்று காவல்துறையினர் அறிவிப்பு பலகையைக் கடந்த 2000ஆம் ஆண்டு வைத்தனர். இதைத் எதிர்த்து வடகாடு ஆதிதிராவிடர் சமூக மக்கள் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அதற்கான சான்றாவணங்களும் அம்மக்களிடம் இருக்கின்றன.

அதன் பிறகு இந்நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியின் தொடர்ச்சியாய் முத்தரையர் சமூகத்தினர் அதைக் கைப்பந்து விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். தங்கள் நிலத்தில் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு வடகாடு ஆதிதிராவிடர் சமூக மக்கள் கேட்டிருக்கிறார்கள்.

இதன் காரணமாக முத்தரையர் சமூகத்தினருக்கும் ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கும் பிரச்சினை உருவானது. 14.01.2025 அன்று நடைபெற்ற இப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஆதிதிராவிடர் மக்கள் நீதிமன்றத்தை நாடி, அவ்வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. அதுவரை யாரும் அந்நிலத்திற்குள் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த முத்தரையர் சமூகத்தினர், கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் பழி தீர்ப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முனைந்ததை அறிய முடிகிறது. அதன் தொடர்ச்சியாக 02.02.2025 அன்று வடகாடு ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்குத் திருமணம் செய்வதற்காக மேற்படி வடகாடு ஊர் பொதுக் கோயிலான முத்துமாரியம்மன் கோயிலுக்குள் சென்றபோது, முத்தரையர் சமூகத்தினர் கோயிலை இழுத்துப் பூட்டியிருக்கிறார்கள். திருமணம் தடைபடுவதை விரும்பாத ஆதிதிராவிடர் சமூகத்தினர் கோயிலுக்கு வெளியில் வைத்து திருமணத்தை முடித்திருக்கிறார்கள். அதே நாளில் ஆதிதிராவிடர் பகுதியில் வேறொரு திருமணம் நடைபெற்றிருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்ட அத்திருமணத்தில், ஆதிதிராவிட மக்கள் கோயில் பிரச்சினை சார்ந்த கோரிக்கையை அவரிடம் வைத்திருக்கிறார்கள். அதே நாளில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு மேற்கண்ட முத்துமாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக விரோதிகளால் எரிக்கப்பட்ட வீடு

வடகாடு ஆதிதிராவிடர் சமூக மக்களுக்குச் சொந்தமான கோயில் நிலத்தை முத்தரையர் சமூகத்தினர் பயன்படுத்திவருவதால், அப்பகுதியில் உள்ள பொதுக்கோயிலான முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஒருநாள் திருவிழா நடத்திக்கொள்ள ஆதிதிராவிடர் சமூகத்தினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். பொதுக்கோயிலில் ஆதிக்கம் செலுத்திவரும் முத்தரையர் சமூகத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

அதற்கடுத்து ஆதிதிராவிடர் சமூக மக்கள் தங்களுக்குச் சொந்தமான அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் கடந்த 27.04.2025 அன்று வழிபாடு நடத்துகின்றனர். இதற்கெதிராக முத்தரையர் சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் ஆதிதிராவிடர் சமூகத்திலிருந்து 56 பேரும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த 16 பேரும் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் நிலப் பிரச்சினைக்கு முன்பு ஆதிதிராவிடர் மக்கள் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபடுவது இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது. இந்தப் பிரச்சினைக்குப் பிறகு, ‘எங்கள் நிலத்தை நீங்கள் விளையாடுவதற்குப் பயன்படுத்திக்கொள்வது போலவே முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் எங்களுக்கும் ஒருநாள் ஒதுக்கித்தர அனுமதி கொடுங்கள்’ என்கிற கோரிக்கையை முன்வைத்தனர் (முன்னதாக முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்குக் கோயில் வாசலில் கடை போடுவதற்கு அனுமதி இருந்தது. கோயில் நிலப்பிரச்சினைக்குப் பிறகு அதுவுமில்லை.).

அது மறுக்கப்பட்டதிலிருந்தே இரு சமூகங்களுக்கிடையே முரண்பாடுகள் அதிகரித்தன. இதன் தொடர்ச்சியாய் தேர்த்திருவிழாவுக்கு வழிபடச் சென்ற ஆதிதிராவிடர் சமூக மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடந்திருக்கிறது. 05.05.2025 இரவு சுமார் 7:30 மணிக்குத் துவங்கிய வன்முறை நள்ளிரவு 12 மணி வரை நீடித்திருக்கிறது. வன்முறை நிகழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் சமூக மக்கள் குடியிருப்புப் பகுதியிலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவிலேயே வடகாடு காவல் நிலையமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கள நிலவரம் இவ்வாறாக இருக்க, தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவே புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறையினர், இது இரண்டு தனி நபர்களுக்குள் பெட்ரோல் நிலையத்தில் நடந்த பிரச்சினையின் விளைவு என ஊடகங்களின் துணையோடு அறிக்கை வெளியிடுகிறது. (மேற்படி பெட்ரோல் நிலையத்தில் அவ்வாறான பிரச்சினையும் நடந்ததற்கான எந்தவொரு சான்றும் இல்லை.) சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரித்து, காரணத்தை அறிந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது மட்டும்தான் காவல்துறையினரின் பணி. ஆனால், அண்மைக்காலங்களில் தமிழ்நாடு காவல்துறையினர் விசாரணை முடிவதற்கு முன்னரே தீர்ப்பெழுதிவிடுகின்றனர். தகவல் பரிமாற்றத் தொழிற்நுட்ப காலத்தில், துரிதமாக அங்கு நிகழ்ந்தவற்றை அறிந்துகொள்ள முடிகிற சூழலில் உண்மைத்தன்மை குறித்து எந்தப் பொறுப்பும் அக்கறையும் இல்லாமல் காவல்துறையினரால் எப்படி இத்தகைய அறிக்கைகளை துணிந்து வெளியிட முடிகிறது? பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக எத்தனை துணிச்சலோடு செயல்பட்டாலும் அதனால் எந்த விளைவுகளும் இல்லை என்று அரசு உறுதியாக நம்புகிறதா?

மாவட்டக் காவல்துறை தனது அறிக்கையில் SC/PR தரப்பினர் மற்றும் முத்துராஜா சமூகத்தினர் எனக் குறிப்பிடுகிறது. பாதிக்கப்பட்டவர்களை SC/PR எனக் குறிப்பிடுவது, தாக்கியவர்களை முத்துராஜா சமூகத்தினர் எனக் குறிப்பிடுவது, இந்தப் பிரச்சினைக்குச் சாதி ஒரு காரணமாக இல்லை என நிறுவுவது, விசாரணை முறையில் பாரபட்சத்தோடு நடந்துகொள்வது என இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது தமிழக அரசும் காவல்துறையும் மிக வெளிப்படையாக முத்தரையர் சமூகத்திற்கு ஆதரவாக இருக்கிறது என்பதற்குப் புதிய சான்றுகள் தேவையில்லை.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் & பழங்குடி ஆணையத் தலைவருடன் விவாதம்

தமிழக முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையினரின் இத்தகைய தொடர் நடவடிக்கைகளை அரசின் சட்டம் ஒழுங்கு தோல்வியாக கருதாமல், விமர்சிக்காமல், பட்டியல் சமூக மக்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறோம் என்று காவல்துறையினரை மட்டுமே விமர்சிப்பவர்கள் தங்களைச் சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது என்பதையும் நாம் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம். தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறும் சாதியப் பிரச்சினைகளில் காவல்துறையும் அரசு இயந்திரமும் செயல்படும் விதம் மிக மோசமான முன்னுதாரணமாக மாறிக்கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் சாதி வெறியையும் ஆணவக்கொலைகளையும் தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும் என 20 நவம்பர், 2018 அன்று அறிவித்தார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். வாக்குறுதி கொடுத்து ஆறு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் புதிய சட்டத்திற்குப் பதில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான புதிய யுத்தியைக் கையாண்டுவருகிறது திமுக அரசு.

வடகாடு ஆதிதிராவிடர் சமூக மக்கள் மீது முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதி பாகுபாட்டையும் வன்முறையையும் தொடர்ந்து செலுத்தி வருவதற்குப் போதுமான சான்றாதாரங்கள் இருக்கின்றன. அவையே நிலம், கோயில் வழிபாட்டு உரிமை உள்ளிட்டவற்றில் வெளிப்படுகிறது. இதற்குக் கிடைக்கும் அரசியல் ஆதரவு அவர்களை மேலும் கூர்மைப்படுத்துகிறது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு செயல்படுவதும் திட்டங்களையும் தீட்டுவதும்தான் அறிவியல்பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.

கோரிக்கைகள்

  1. பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் சமூக மக்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்கினை ரத்து செய்ய வேண்டும்.
  2. வடகாடு திருவள்ளுவர் பகுதி ஆதிதிராவிடர் மக்களின் வாழ்வாதார மற்றும் தார்மீக உரிமையைப் பறிக்கும் சாதி இந்துக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  3. ஏற்கெனவே 2015ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் நிலத்தை ஆதிதிராவிடர் சமூக மக்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
  4. கண்துடைப்புக்குக் கைது செய்யப்பட்ட ஓரிரு நபர்களைத் தவிர்த்து கலவரத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
  5. இந்தக் கலவரத்தின் முக்கிய நபராக இருந்து செயல்பட்ட சின்னத்துரை மகன் நடராஜன் (வாலிபால் சங்கத்தின் தலைவர்) கைது செய்யப்பட வேண்டும்.
  6. ஆதிதிராவிடர் பகுதியை ஒட்டி நிறுவப்பட்டுள்ள டாஸ்மாக் கடை அப்புறப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்.
  7. பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கி மாற்றுக் கதையாடல்களைப் புனைந்துவரும் காவல்துறையின் போக்குக்கு எதிராக நீலம் பண்பாட்டு மையம் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்வதோடு, பெயரளவில் இருக்கும் சமூகநீதியை நிலைநாட்டவும் கோருகிறது.

புகைப்படங்கள் : சாமுவேல் அற்புதராஜ்

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger