வெகுஜன உணர்வெழுச்சியை ஆளும் மதவாதம்

தலையங்கம்

மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி பத்தாண்டுகளைக் கடந்து ஆட்சியில் இருந்துவரும் சூழலில், கடந்த தேர்தலில் சந்தித்த சரிவால் கூட்டணி ஆட்சியமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டது. 2019 தேர்தலிலேயே பின்னடைவுகளைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் துணை இராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்தது. வட இந்தியாவில் இத்தாக்குதல் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதையொட்டி பாஜக அரசு தமது செல்வாக்கை நிலைநிறுத்தியது. இந்தியா என்கிற தேசத்தின் பாதுகாவலராக மோடி மட்டுமே இருக்க முடியும் எனச் சமூகவலைதள பரப்புரைகளில் இறங்கினர் சங் பரிவார ஆதரவாளர்கள்.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேரைத் தீவிரவாத அமைப்பினர் சுட்டுக் கொன்றனர். நாட்டையே உலுக்கிய இத்தாக்குதலுக்கு எதிராக அரசியல் வேறுபாடுகளைக் களைந்து ஓரணியில் நின்றன இந்திய அரசியல் கட்சிகள். இத்தாக்குதலுக்குப் பதிலடியாக மே 7ஆம் தேதி நள்ளிரவு ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் தொடங்கியபோதும் இந்த ஆதரவு நீண்டது.

இந்திய உளவுத்துறையின் முழுமையான தோல்வி என்பன போன்ற விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு பஹல்காம் தாக்குதல் எதன்பொருட்டும் கொடூரமானது. இதற்குப் பதிலடியாக நீதி வேண்டி நடத்தப்படும் எதிர் தாக்குதல் என்பதாலும், ஒரு நாட்டின் மக்களுக்குப் பாதுகாப்பு உணர்வைக் கொடுக்க வேண்டும் என்பதாலும் இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் தவிர்க்க முடியாததாகின்றன. அந்த அளவிலேயே பார்க்கப்பட வேண்டிய இவ்விவகாரத்தை, மூன்றாம் உலகப் போருக்கான பிரகடனமாகப் பேசித் தீர்த்தன இந்திய ஊடகங்கள். மோடி மீதான தங்கள் விசுவாசத்தை நிரூபிக்கவும், சரிந்துவரும் மோடியின் பிம்பத்தை நிலைநிறுத்தவும் இதைப் பயன்படுத்திக்கொண்டன. இந்து தேசியவாதிகளாலும் ஊடகங்களாலும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கட்டமைக்கப்பட்ட மோடி என்கிற பிம்பத்துக்கு, உலக அளவில் இருக்கும் செல்வாக்கு பஹல்காம் தாக்குதலின் ஊடாகவும் ஆபரேஷன் சிந்தூர் மூலமாகவும் அம்பலமாகியிருக்கிறது.

ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டு மூன்றாவது நாளின் இறுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் இசைந்துள்ளதாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அந்த அறிவிப்புக்குப் பின்னரே இந்தியா அதை வழிமொழிந்தது. உலக அரங்கில் இந்தியா இத்தகைய அவமானத்தை இதுவரை சந்தித்திருக்குமா என்பது கேள்விக்குறி. பொருளாதார – அரசியல் வலிமையற்ற நாடுகள் மீது மேலாதிக்கம் செய்வது அமெரிக்காவின் வரலாற்றுப் பண்புகளில் ஒன்று. அரசியல் ரீதியாக முரண்பாடுகள் உருவாகும்போது பிற நாடுகளின் பொருளாதாரச் சார்புநிலையை அசைத்துப் பார்க்கும் வேலையையும் அமெரிக்கா செய்திருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் அதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் தாமாக முன்வந்து அளவுக்கு அதிகமாக இதில் இடையீடு செய்தார். அவரே போர் நிறுத்தத்தை அறிவித்தார். வர்த்தக உறவைச் சுட்டிக்காட்டி இந்தியாவையும் பாகிஸ்தானையும் மிரட்டிப் பணிய வைத்ததாக வெளிப்படையாக அறிவித்தார். மோடி மற்றும் பாஜக தரப்பில் இதுவரை இதற்கு எந்த மறுப்பையும் நேரடியாகத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பத்தாண்டுகளில் மோடி 85 முறைக்கு மேல் வெளிநாடுகளுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதற்காக மூவாயிரம் கோடிக்கு மேல் செலவிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்த கேள்விகள் எழும்போதெல்லாம் உலக நாடுகளிடையே முக்கியமான ஒப்பந்தங்களையும் ஆதரவையும் திரட்டிவருவதாக பாஜகவினர் சொல்வதுண்டு. ஆனால், பஹல்கம் தாக்குதலுக்குப் பின்னால் அதற்கான சிறு அறிகுறி கூட தென்படவில்லை. மாறாக, மோடியால் உலக அரங்கில் இந்தியச் செல்வாக்கு சரிந்திருக்கிறது என்பதே பஹல்காம் நமக்குணர்த்துவது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா பயணமானார் மோடி. சட்டத்துக்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறியவர்களை அவர்தம் நாட்டுக்கே திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தது அமெரிக்கா. அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகச் சிரித்துக் கை குலுக்கிவிட்டு வந்தார் மோடி. அதன்படி மூன்று அமெரிக்க இராணுவ விமானங்கள் அதே மாதம் பஞ்சாபில் தரையிறங்கின. பிழைப்புக்காக எல்லை தாண்டியவர்கள் கொடும் குற்றவாளிகளைப் போல கைகளும் கால்களும் சங்கிலிகளால் பின்னப்பட்டு இழுத்து வரப்பட்டனர்.

கொலம்பியாவுக்கும் இதேபோல ஓர் இராணுவ விமானத்தில் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியவர்களை அனுப்பியது அமெரிக்கா. தங்கள் நாட்டினர் கிரிமினல் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவதாகக் குற்றம்சாட்டிய அந்நாட்டின் பிரதமர் குஸ்தாவோ பெட்ரோ, அமெரிக்க விமானம் தரையிறங்க அனுமதி மறுத்தார். கடும் வரி விதிப்புக்கு கொலம்பியா ஆளாக நேரிடும் என டிரம்ப் எச்சரித்த பிறகு, குற்றவாளிகளை அழைத்து வருவதுபோல் அல்லாமல் தங்கள் நாட்டின் சொந்த விமானத்தை அனுப்பி கண்ணியமாக அவர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்து, அதன்படியே செய்தார் குஸ்தாவோ பெட்ரோ.

ஒரு தேசத்தில் வாழ வழியில்லாத ஒருவர் பிறிதொரு நாட்டில் சட்டத்திற்குப் புறம்பாகவே குடியேறினாலும் அவரை விசாரித்து அவர் வாதத்தில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவருக்குப் பாதுகாப்பையும் உணவையும் உறுதி செய்யும் பல சட்டங்கள் ஐரோப்பிய, அமெரிக்கா நாடுகளில் உள்ளன. இந்த வாய்ப்பைப் பறித்து, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் அனைவரும் போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனப் பிரகடனம் செய்தே கொடிய விலங்குகளைப் போலத் துரத்தியடித்தார் டிரம்ப். தன் நாட்டு மக்களின் சுயமரியாதையை உயர்வாகக் கருதிய கொலம்பியா பிரதமர், அவர்களைக் கண்ணியமாகக் கையாண்டார். மோடி தன் அடிமை விசுவாசத்தை அமெரிக்கா போய் நிரூபித்துவிட்டு வந்தார். அமெரிக்காவிலிருந்து வந்த மூன்று விமானங்களையும் பஞ்சாப் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறக்கியதைக் கடுமையாக விமர்சித்திருந்தார் அம்மாநில முதல்வர் பகவந்த் சிங் மான். சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறிய பிரச்சினையைப் பஞ்சாபின் பிரச்சினையாகச் சுருக்கப் பார்க்கிறது மத்திய அரசு என்பதே அவரது குற்றச்சாட்டு. ஒரு மாநில அரசின் முதல்வருக்கு இருக்கும் மாண்பு மத்திய அமைச்சரவையில் இருக்கும் ஒருவருக்குக் கூட இல்லை என்பது துயரநிலை. இப்படிப்பட்ட ஒரு பிரதமர் இருக்கும்போது இந்தியா – பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது என டிரம்ப் அறிவித்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அந்நிகழ்வுக்குப் பிறகு சீனாவின் செயலிகளை மொபைல் போன்களிலிருந்து நீக்கித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள் இந்துத்துவர்கள். ஆனால், பஹல்கம் விவகாரத்தில் ஒரு நாட்டின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட போர் என்பதை விடவும், சீனாவை விட பாகிஸ்தான் வலிமை குறைந்த நாடு என்பதை விடவும், இந்து – இஸ்லாமியர்கள் எனும் மத அரசியலே மேலோங்கியிருக்கிறது, இறந்த அப்பாவிகளுக்கு நீதி பெற்றுத் தருவதைக் காட்டிலும்.

ஒரு நாட்டின் அசாதாரண சூழலைக் கைகாட்டி தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் எவரும் அந்த நாட்டிற்கு உண்மையானவர்களாக இருக்க முடியாது, அந்த வகையில் மோடியோ பாரதிய ஜனதாவோ அவர்களது வரலாற்றின்படி ஒருகாலமும் இம்மக்களுக்கு உண்மையானவர்களாக இருக்க வாய்ப்பில்லை. புல்வாமா, பஹல்காம் உள்ளிட்ட நிகழ்வுகளைத் தங்களது தேச பக்தி அரசியலுக்கு ஆதாரமாய் பயன்படுத்திக்கொள்ளும் இவர்களது அரசியலை முறியடிப்பது என்பது, உணர்வெழுச்சிக்கு ஆட்படும் வெகுஜன அரசியலுக்கு முன்னே நமக்கிருக்கும் மிகப்பெரிய சவால்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger