எங்கள் நாட்டில்
கண்ணீரைப் பொழிகிறது
மேகம்
எல்லையின் முட்வேலியைக்
காயப்படுத்துகிறது
மேக நிழல்
கடலின் ஆடையைத்
துளைக்கின்றன
தோட்டாக்கள்
கருப்பு அலைகளில்
கரைகிறது
மீனவர்களின் இரத்தம்
நாடு விட்டு நாடு செல்லும்
புறாக்கள் கூட்டமே!
மேகக் குடும்பமே!
எங்கள் நாடு மிகச் சிறிது
தயவுசெய்து
உங்களுடன் எங்களையும்
காற்றில் சுமந்துசெல்லுங்கள்
உங்களுடன் பறக்க
எங்கள் உடல்களைக்
கழற்ற வேண்டுமா?
ஒரு வெற்றிடத்தால்
பிறிதொரு வெற்றிடத்தைச்
சுமக்க இயலுமா?
பாஸ்போர்ட், விமான டிக்கெட்,
பயணப்பொருட்கள் எதுவுமற்ற
பயணம் சாத்தியமா?
எங்களையும்
தாய்நாட்டையும்
சுமந்து சுமந்து சோர்ந்துவிட்டோம்
அடுத்த நிறுத்தத்தின்
காத்திருப்பில் செத்துவிட்டோம்
பயணத்தைத் தொடங்காத ஏக்கத்தில்
நைந்துவிட்டன
எங்கள் உடைகள்
காய்ந்துபோன எங்கள் பாதங்களில்
படர்ந்துவிட்டன
பாசிகள்
ஓக் மரங்களுக்கடியில்
எங்கள் கல்லறைகளைத் தோண்ட
நீளமாய் வளர்ந்துவிட்டன
நகங்கள்
பூமியே!
வானில் பயணிக்கும் எங்கள்மீது
மழைபொழிவது
எப்போது?
m
கவிஞர், சிறுகதையாசிரியர், திறனாய்வாளர், நூலகர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர் முஸ்அப் அபூ தூஹா. 1992இல் காஸாவிலுள்ள ஓர் அகதிகள் முகாமில் பிறந்த முஸ்அப், தற்போது அமெரிக்காவில் வசித்துவருகிறார். காஸா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும், நியூயார்க் சைராகஸ் பல்கலைக்கழகத்தில் படைப்பிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். 2017இல் காஸாவில் ‘எட்வர்ட் சையத் நூலக’த்தை நிறுவினார். 2022இல் வெளியான ‘Things You May Find Hidden in My Ear’ என்ற இவரது கவிதைத் தொகுப்பு அமெரிக்கப் புத்தக விருதையும் ஃபலஸ்தீன் புத்தக விருதையும் பெற்றது. தி நியூயார்க்கர் பத்திரிகையில் காஸாவின் போர் பாதிப்புகள் குறித்து எழுதிய விமர்சனக் கட்டுரைகளுக்காக இவ்வாண்டு (2025) அமெரிக்காவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான புலிட்சர் விருதைப் பெற்றார். அரபியிலும் ஆங்கிலத்திலும் எழுதிக்கொண்டிருக்கும் முஸ்அபின் மற்றுமொரு முக்கியமான கவிதைத் தொகுப்பு ‘Forest of Noise’.