பூமியைச் சேர்ந்த ஆண்கள் செவ்வாய் கிரகத்திற்கு வந்தனர். சிலர் பயந்தனர்; சிலர் தைரியமாக இருந்தனர்; சிலர் மகிழ்ச்சியாக இருந்தனர்; சிலர் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தனர்; சிலர் யாத்ரீகர்களைப் போல உணர்ந்தனர்; சிலர் அப்படி உணரவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தது. சிலர் மோசமான மனைவிகள், வெறுப்பான வேலைகள் அல்லது பிடிக்காத நகரங்களை விட்டு வந்திருந்தனர். அவர்கள் எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள், அல்லது எதையாவது விட்டுச்செல்ல முயன்றார்கள், அல்லது எதையாவது கண்டுபிடிக்க நினைத்தார்கள், சிலர் எதையோ தோண்டி எடுக்கவும், மற்றவர்கள் அதைப் புதைக்கவும், சிலர் அதை அப்படியே விட்டுவிடவும் விரும்பினர்.
சிலருக்குப் பெரிய கனவுகளும், சிலருக்குச் சிறிய கனவுகளும் இருந்தன, சிலருக்குக் கனவுகளே இல்லை.
ஆனால், பூமியெங்கிலும் உள்ள நகரங்களில், பிரகாசமான, நான்கு வண்ண சுவரொட்டியில் அரசாங்கம் ஒன்றைச் சுட்டிக்காட்டியது:
“வானத்தில் உங்களுக்கு வேலை இருக்கிறது: செவ்வாய் கிரகத்தைப் பாருங்கள்!”
அதனால் ஆண்கள் முன்வந்தனர். முதலில் வெகுசிலர் மட்டுமே, நாற்பது பேர் இருக்கலாம். ஏனென்றால், ராக்கெட் பூமியை விட்டு வெளியேறுவதற்கு முன்பே பெரும்பாலான மக்கள் ஒருவகையான தீவிர நோயை உணர்ந்தனர். அந்த நோய்க்குத் ‘தனிமை’ என்று பெயரிடப்பட்டிருந்தது.
ஏனெனில், பூமியானது முதலில் முஷ்டி அளவிலும், பின்னர் ஒரு எலுமிச்சை அளவிலும், பின்னர் ஒரு சிறிய புள்ளியின் அளவிலும், இறுதியாக ராக்கெட் உமிழும் நெருப்பின் பாதையில் காணாமல் போவதைத் தூரத்திலிருந்து பார்க்கும்போது, உண்மையில் ஒருபோதும் பிறக்காததுபோல, தனக்கென்று ஓர் ஊர் இல்லாதது போல, அடையாளம் தெரியாத இடத்தில் இருப்பதுபோல, சுற்றிலும் விண்வெளி மட்டுமே இருப்பதுபோல, பழக்கமான எதுவும் இல்லாததுபோல, அந்நிய மனிதர்கள் மட்டுமே இருப்பதாக உணர்ந்தனர்.
இல்லினாய்ஸ், அயோவா, மிசௌரி அல்லது மொன்டானா போன்ற அனைத்து மாநிலங்களும் மேகக் கடல்களில் மறைந்தபோது, குறிப்பாக அமெரிக்கா முழுவதும் ஒரு பனிமூட்டமான தீவாகச் சுருங்கியபோது, இறுதியாக முழு பூமியும் விண்வெளியில் தூக்கி எறியப்பட்ட சேறும் சகதியுமான பேஸ்பால் போலத் தோன்றியது. அவர்கள் முற்றிலும் தனிமையாக உணர்ந்தனர், விண்வெளியின் பறந்த வெளியில் அலைந்தபடி, அவர்கள் கற்பனைகூட செய்ய முடியாத ஒரு புதிய உலகத்தை நோக்கிச் சென்றனர்.
எனவே, முதலில் ஒரு சில ஆண்கள் மட்டுமே வந்ததில் ஆச்சரியமில்லை. பூமியைச் சேர்ந்த ஆண்கள் வந்ததால் செவ்வாய் கிரகத்தில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்தது. மற்றவர்கள் அருகில் இருப்பது சூழலை எளிதாக்கியது. ஆனால், முதலில் வந்த தனிமையானவர்கள், அனைத்தையும் தாங்களே எதிர்கொள்ள வேண்டியிருந்தது.