அந்நியன்
பல்லாயிரம் அழகான மனிதர்கள் நடுவே
எனை ஈர்த்து உன்வயப்படுத்தி
தடம் பதித்துச் செல்வது நீ மட்டுமே
முற்றிலும் அந்நியனான உனைக் காண்கையில்
பொங்கும் என் ஆன்மா காற்றினூடாகப் பாய்ந்து
இடம் மாறி மிதக்கிறது அந்தரத்தில்
உன்னால் என்னுள் உண்டான மாற்றத்தைப்
பறைசாற்றுதல் அத்தனை எளிதல்ல
என்றென்றைக்குமான உன் வசீகரத்தால்
என் இருப்பை மறக்கச் செய்கிறாய்
நிலவு ஒருவேளை புன்னகைத்திருந்தால்
அத்தோற்றம் உன்னை ஒத்ததாய் இருந்திருக்கும்
உன்னை அடைதல் என்பது
பூமியிடமிருந்து சந்திரனைப் பறித்துக்கொள்வது போல்
வெகு அருகில் எனினும் மிகத் தொலைவில்
வெகு பரிச்சயம் எனினும் மிகப் புதிதாக
அறிமுகமற்ற ஒருவன் எனினும் நான் நன்கறிந்த அந்நியன் நீ.
மணிப்பூரின் உக்ருலில் உள்ள செனிக் மலைப் பகுதியில் இருந்து எழுத வந்தவர் தெம்ரெய்ச்சன் லெய்ஸன் (Themreichon Leisan). சிறந்த வாசகர். நூல் மதிப்புரைகள் எழுதுவதிலும் கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் மிகுந்தவர்.
சாதிய வசைகள், உடல் கேலி
என் முதற்பெயர் பொருத்தமற்றது; என் கடைசிப் பெயர் அபாயகரமானது என்கிறார்கள். என் நடுப் பெயரோடு பிறந்த பெண் மட்டுமே அறியப்பட வேண்டியவள். எம் பெயர்கள் அரசியல்மயப்பட்டவை; எம் மொழியும்தான்; போலவே என் கடவுளும் என் பெண்களும். பேராசைக் கொண்ட வியாபாரிகளால் மூச்சுத் திணறுகிறது எம் தேசம். புலம்புகின்ற தாய்மார்களால் நிரம்பியிருக்கின்றன எம் வீடுகள். ஒரு தாயின் சினம் என்பது மரண தண்டனைக்கு ஒப்பானது; கடவுளர்களும் அதற்குத் தடைவிதிக்கின்றனர். ஒரு பெண்ணின் விடுதலைக்கு அவள் பல விலைகள் தர வேண்டியுள்ளது; அவர்கள் கடக்க வேண்டியது எல்லைகளையோ தந்தைகளையோ, கணவர்களையோ அல்லது பிரா பட்டைகளையோ எதுவாயினும். நாங்கள் பல பெயர்களால் அழைக்கப்படுகிறோம். கழுவேரி*. புலையாடி*. தவிரவும் அப்பெயர்கள் அரசியல்மயப்பட்டவை. ஆரோக்கியமானதொரு கருப்பையை நான் சுமப்பதால் ஏறத்தாழ பெண் என அழைக்கப்படுகிறேன். என் உடலில் வளைவுகள் இல்லையென்பதால் ஆண் என அழைக்கப்படுகிறேன். என் தந்தை மீது வோட்கா நாற்றம் வீசினால் நான் முறைகேடாகப் பிறந்தவள் என அழைக்கப்படுகிறேன். நாங்கள் பெயர்களால் அழைக்கப்படுகிறோம்; மேலும் பெயர்கள் அரசியல்மயப்பட்டவை. நான் எல்லா உண்மைகளையும் உங்களுக்குச் சொல்வேன். ஆனால் அனைத்தையும் சொல்லவும், எதையும் சொல்லாமல் இருக்கவுமான கலையில் நான் தேர்ச்சி பெற்றவள். எப்போது குருதி நிரம்பிய என் வாயிலிருந்து அவ்வுண்மைகள் வெளிப்படுகின்றனவோ அப்போது அது உங்கள் கவனத்தைத் தொந்தரவு செய்யும், உங்கள் செவிகளில் ரத்தம் கசியச் செய்யும். எம் நதிகளும் எம் கடல்களும் இன்று சிவப்பு நிறத்தில் உள்ளன.
** மலையாளத்தில் புழங்கப்படும் வசைச் சொற்கள்
அடையாளம், நம்பிக்கை, எதிர்ப்புணர்வு ஆகியவற்றைத் துணிவோடு ஆய்வு செய்த ‘Name of Lilith’ எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ரணீஷா நஜிதா ரஃபீக். உணர்வுபூர்வமாகப் பிரதிபலிக்கும் அச்சமற்ற தன் குரலுக்காக அறியப்படுபவர். ரணீஷாவின் கவிதைகள் அப்பட்டமான துயரத்தையும் உணர்வுகளின் வலிமையையும் சொல்வதாக உள்ளன.
முலைதருபவள் (மஹாஸ்வேதா தேவியைத் தொடர்ந்து)
என் முலைகளைத் தருகிறேன்
அவர்கள் தவறிழைக்க
நீங்கள் காமத்துடன் தடவ
தாயென்று நீங்கள் அளித்த தெய்வீக பிம்பத்துடன்
குழந்தைகளுக்குப் பாலூட்ட
அக்கறைகொள்ளுதல், வருடுதல், அழுத்துதல், பால்குடித்தல் –
இப்படி வெவ்வேறு வடிவங்களில் பசிதான் முக்கியம்
அப்பசியைப் பெறுவதற்கு எவருமில்லையெனில்
நான் தனியே அனுப்பப்படுகிறேன்
அக்கறையற்று, அன்பான அரவணைப்புகளற்று
கொல்லப்பட்ட சிறுதெய்வங்கள் போல
அல்லது குறைந்தபட்சம்
பெண் சிறுதெய்வங்கள் போல
இணைக்கும் வேர்களின்றி
விதைகள் மறுக்கப்பட்டு
முன்னோரின் பாரம்பரியம் ஏதுமின்றி
என்னைப் பின்தொடரவும் எவருமின்றி
அனுப்பப்படுகிறேன்.
எம்.சி.கனூலா இலங்கை திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மாணவி. அடையாளம் மற்றும் முரண்பாடுகள் ஆகியவற்றை எழுத விரும்புபவர்.
நன்றி: poemsindia.in