அடமழ நாளுல மாட்ட புடிச்சிக்கிட்டுப் போகச் சொல்லி ஆளு மேல ஆள் அனுப்பும் தலையாட்டியன் அண்ணாச்சிய இறங்காட்டுப் பருத்திமிளாரையும் சோளத்தட்டையையும் துவரமிளாரையும் ஒண்ணாப்போட்டுக் கொளுத்தினால் மிஞ்சி மிஞ்சிப் போன பாவக்கணக்கில் ஒன்னுதானே கூடிப்போகும். தன்னுடைய கட்டைவிரலின் நுனி குனிந்ததும் மற்ற விரல்களின் நுனியைப் பட்டும் படாமலும் தேடிப்போயி தொட்டும் கூட்டிக் கழிச்சி எண்ணியதைக் கவனித்தாள். தனக்குள் தொலைந்து போன பாவங்களை எடுத்துப் பார்க்க முடியாத தூரத்தில் தேடினாள். எங்கயோ உக்காந்துக்கிட்டுப் பாவக்கணக்கு எழுதுபவனின் விரல்களை வலிக்க வலிக்க மாட்டடிச்சி வித்துக் காசாக்கி அனுபவச்சி வாழ்ந்தாள்.
“ஊருல சொன்ன எல்லா வைத்தியத்தையும் செஞ்சி சலிச்சிப் போயிட்டேன். செனப்புடிக்கவே இல்ல தாயி. இறங்காட்டுல தீனி கிடைக்கிறதே பெரும்பாடு. தண்டத்துக்கு மலட்டு மாட்ட வளத்து என்னத்த லாபமுன்னு யோசிப்பதான் உங்கிட்ட கொடுத்தா நம்ம ரெண்டு பேத்துக்குமே லாபமுன்னு தோணுச்சி. அப்பறம் நீ செனைப்புடிக்காத மாட்ட வாங்குனதும் கறிப்போடாம வைத்தியம் பார்த்துச் செனை நின்னுச்சின்னா விக்கிறதா சொன்னாங்க. அப்படி ஒருவேளை என்னோட மாடும் செனை நின்னுச்சுன்னா எங்கிட்டயே வித்துப்புடு சாமி. அந்தப் புள்ள கைராசிக்கு வருசக்கணக்கா செனப் புடிக்காத மாடும் கண்ணுக்குட்டி போடுமுன்னு நடேசன் தாத்தா சொன்னாரு. காட்டுப்புறத்துல வேற யாரு சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டேன். நடேசன் தாத்தா வாயிலிருந்து வர வார்த்தையில ஒத்த சொல்லு கூட்டியும்மிருக்காது குறைச்சுயும்மிருக்காதுன்னு தெரியும்” பக்கத்தூருக்கு எழுவுக்கு வந்த தலையாட்டியான் அண்ணாச்சி அவளோட தலக்கடயில் நின்னு தண்ணிய வாங்கிக் குடிச்சிட்டு தண்ணி சொம்ப கீழ வைக்கும்போது சொல்லிட்டு மீண்டும் அவளைப் பார்த்து “பெருமாளு ரெண்டாதாரமா கட்டிக்கிட்டவளோட நடத்தைச் சரியில்லன்னு பேசிக்கிறாங்க, நடக்காத ஒன்ன ஊரு வாயி பேசாதுன்னு சொன்ன என்னோட வூட்டுக்காரித்தான் பெருமாளோட கதையை உங்கிட்ட சொல்லவேணாமுன்னு சொல்லித்தான் அனுப்புனா” எதையோ எதிர்பார்த்துச் சொன்னவரால் தனித்து வாழ்ந்தவளிடமிருந்து எதையும் பிரித்துப் பார்க்க முடியாம இறங்காட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போற பாதையில் நடந்தார்.
செனை நிக்காத மாட்டோட நெனப்பு வந்து அப்பப்ப முட்டியதில் இறங்காட்டுப்புறத்தில் பெருமாளோடு வாழ்ந்த வாழ்க்கையை முட்டிமோதி வெளியே தள்ளியதும் இறங்காட்டு ஊரோட அடமழ நாளுங்க தான் முதலில் நியாபகத்துக்கு வந்தது. ஐப்பசி மாசத்து அடமழ நாளுங்க வந்துட்டா இறங்காட்டுப்புறத்தில் வூட்டவுட்டு ஒருத்திக்கும் வெளிய போக மனசு வராது. நல்லா விடிஞ்சும் பீ மூத்திரத்தை வவுத்துக்குள்ளவே வச்சி அடக்கி அடக்கிப் முடியாத சமயத்துல வவுத்தையும் சூத்தையும் இழுத்துப் புடிச்சிக்கிட்டு வெட்ட வெளிச்சத்தில் பீக்காட்டுக்கு ஓடுவாளுங்க. பீக்காட்டு ஒலையில கால வச்சாலும் பருத்திக்காட்டு ஒலையில கால வச்சாலும் தொடை வரை உள்ளுழுத்து மறச்சிக்கும். காலோடு ஒட்டிக்கிட்டுக் கீழே விழாமல் அடம்புடிக்கும் ஈரங்கூடிய ஒலையின் பாரத்தோடு அடுத்தடியெடுத்து வைக்க முடியாமத் திணறிப்போன நாட்களைக் காட்டுப்புறத்தில் இறக்கி வைக்க நினைச்சவள், தன்னுடைய ரெண்டுகாலையும் நீட்டி உக்காந்து, இறங்காட்டுக் காலு வலியைத் தொட்டுத் தடவி மிச்ச மீதி ஒட்டியிருந்ததை உறுவி உதறினாள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then