பொருள் கொளல்
ஓர் இளநீலக் கூழாங்கல்,
மிக உயிர்ப்புள்ள ஓர் அழகியல் படிமம்.
அதன் உடலில் தன்னியல்பில் விழுந்த முடிவிலி வடுக்கள்,
இப்போது அது தத்துவார்த்தப் படிமம்.
கூழாங்கல்லின் இதயக் குளிர்மை
மேலுமதைச் சுற்றிக் காற்று வரையும் மணற்சுழிகள்,
இக்கணம் இதுவோர் ஆன்மீகப் படிமம்.
கூழாங்கல்லை நோக்கி விசையோடு பாயும்
ஒரு ரத்தக்கறை படிந்த சற்று பெரிய சுத்தியல்,
இப்போது மொத்தமாக எல்லாம் அரசியல்.
போர் பற்றிய கவிதைக்குள்
ஒரே மொழியின்
கருத்து வேறுபாடு கொண்ட
இரு வாக்கியங்கள் மோதிக்கொண்டன.
பூசல் தீவிரமாகி
அந்தந்த வாக்கியங்களிலுள்ள
சொற்களும் சொற்களுமே மோதிக்கொண்டன.
பகை உச்சமாகி
ஒரே சொல்லின்
எழுத்துகளும் எழுத்துகளுமே மோதிக்கொண்டன.
முடிவில்
பொருளின்மையின் நிழல்கள்
வட்டமடிக்கின்றன சிதைவுகளின்மீது.
நான் – நீ – அவன்
கதையில் உங்களோடு சேர்த்து மூவர்.
அதிலொருவர் சில நிமிடங்களுக்கு முன்புதான்
குத்துப்பட்டு இறந்தார்.
இப்போது நீங்கள் இருவர் மட்டுமே.
இருவர் கைகளிலும்
கூர்மையான ஆயுதங்கள்.
திடீரெனப் புழுதி கிளம்புகிறது,
இருவரில் யார் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்
எனக் கணிக்க முடியவில்லை.
உங்கள் இருவரில்
ஒருவர்…
யார் எனத் தட்டுப்படவில்லை.
இன்னொருவரின் மார்பில்
குறுவாளைக் குத்தி இறக்கிக்
கிழித்து
ரத்தம் பெருகுகிறது…
அய்யோ அதில் அவ்வளவு சூடு.
ம்…
அவ்வளவுதான்
கதை முடிந்துவிட்டது.
உண்மையைச் சொல்லுங்கள்,
கடைசிக் காட்சியில்
இருவரில் யாராக உங்களைக் கற்பனை செய்துகொண்டீர்கள்?