கறுப்புத் திரை

ஜா.தீபா

ரே ஒரு திரைப்படம். அது காலங்கள் கடந்தும் பேசப்படுகிறது. இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க லைப்ரரி காங்கிரஸில் இருந்த அதன் பிரதி டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது. எந்த ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கத் திரைப்பட இயக்குநரிடமும் அவரைப் பாதித்த படங்கள் என்று கேட்டால், Daughter of the Dust படத்தினைச் சொல்வார்கள். இயக்கியவர் ஜூலி டாஷ். முழு நீளத் திரைப்படத்தை இயக்கிய முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி இவர். Daughter of the Dust படத்திற்கு முன்பு டிவி தொடர்களை எழுதியும் இயக்கியும் வந்தவர், குறும்படங்களும் இயக்கியிருக்கிறார். ஆனால், இப்போதும் அமெரிக்கர்களுக்கு ஜூலி டாஷ் என்றால் நினைவில் இருப்பது இந்தத் திரைப்படம்தான்.

இப்படம் கடந்த காலத்தின் அழிக்க முடியாத ஒரு பகுதி. இயக்குநராக மனதின் ஆழத்தில் இருந்து ஒரு படத்தினை எதற்காக இயக்குகிறோம் என்று தெரிந்து இயக்கும்போது வெளிவந்த உத்வேகமான படைப்பு.

படத்தைப் பார்ப்பதற்கு முன்பு அதன் பின்னணியைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஜார்ஜியா பிரதேசத்தில் உள்ள செயிண்ட் ஹெலேனா தீவுதான் படத்தின் களம். 1903ஆம் ஆண்டு இந்தத் தீவில் நடந்த ஒரு நிகழ்வினைக் கொண்டே கதை எழுதப்பட்டுள்ளது. இதோடு இத்தீவுக்கு அருகிலுள்ள இக்பூ லேண்டிங் என்ற இடம் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இன்று இந்த இடம் குறித்தும் அங்கு நடந்த மறக்க முடியாத சம்பவம் குறித்தும் ஜார்ஜியா நகரப் பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள்.

மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து 1803ஆம் வருடம் ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்களில் இக்பூ எனப்படும் நைஜிரியப் பழங்குடியினரும் உண்டு. கப்பலில் அழைத்துவரும் வழியில் இந்தப் பழங்குடியினர் ஒன்றிணைந்து கப்பலைக் கைப்பற்றியிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் தப்பிச்செல்ல முடியவில்லை. இவர்களைச் சங்கிலியால் பிணைத்து ஒரு தீவில் இறக்க முயற்சிக்கும்போது அனைவருமே கடலில் இறங்கியிருக்கிறார்கள். அதன்பின் நடந்ததை ஆப்பிரிக்க அமெரிக்க நாட்டுப்புறப் பாடல்கள் சாகசமாய் வர்ணிக்கின்றன. இவர்கள் இறங்கியதும் கடலே அவர்களுக்கு வழிவிட்டது என்கின்றன பாடல்கள். இன்றும்கூட இவ்வின மக்கள் தீவிரமாக நம்புகிற ஒரு நிகழ்வு, தங்கள் மூதாதையர் கடலில் நடந்தார்கள் என்பது. ஆனால், இறங்கிய அனைவருமே கடலுக்குள் மறைந்து போனதாக நேரில் பார்த்த ஆப்பிரிக்க அடிமை விற்பனையாளர்கள் தங்களது குறிப்பில் எழுதியிருக்கிறார்கள். அவர்களில் சிலருடைய சடலங்களையும் மீட்டிருக்கிறார்கள். கரை ஒதுங்கியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டவர்களைக் கண்டதும் சுட்டுக்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. கப்பலில் எஞ்சிய மற்ற இக்பூ பழங்குடியினரை ஒரு தீவில் இறக்கியிருக்கிறார்கள். அந்தத் தீவு இக்பூ லேண்டிங் பிரதேசம் என்றே பெயர் பெற்றிருக்கிறது. இந்தப் பிரதேசம் இன்று வரலாற்றுச் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.

அங்கிருந்து அருகில் உள்ள தீவான செயிண்ட் ஹெலினாவுக்கு இக்பூ அடிமைகளைக் கொண்டுவருகின்றனர். அங்கு இண்டிகோ மை தயாரிக்கும், சாயம் பூசும் வேலைகளை அவர்களுக்குத் தந்திருக்கிறார்கள். நாள் முழுவதும் சாயங்களை அலசி வெடித்துப்போன கைகளோடு வாழ்ந்திருக்கிறார்கள். அடிமை முறை ஒழிக்கப்பட்டு, எவரும் எங்கும் செல்ல முடியும் என்கிற நிலை வந்ததும் அந்தத் தீவில் வாழ்ந்த சிலர் அமெரிக்காவின் வடக்குப் பகுதிக்குச் செல்ல முடிவு செய்கின்றனர். இவர்கள் யாவரும் பேஜெண்ட் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இதன் பின்னணியில் உருவாக்கப்பட்டதுதான் Daughter of the Dust. படத்தில் இத்தீவிலிருந்து வெளியேறி அமெரிக்காவின் வடபகுதிக்குச் செல்ல வேண்டும் என்று சில குடும்பங்கள் முடிவு செய்கின்றன. அதற்கான பிரிவு உபசார விருந்து தீவில் நடைபெறுகிறது. விருந்தில் கலந்துகொள்ள எல்லோ மேரி என்கிற பேஜெண்ட் இனப் பெண்ணும், அவரது காதலியும் வருகிறார்கள். இவர்களுடன் ஏற்கெனவே நகரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் வயோலா பேஜெண்ட் என்பவரும் தீவைப் புகைப்படமெடுக்க வரும் ஸ்நெட் என்பவரும் வருகிறார்கள். கிறித்தவ மதத்துக்கு மாறியிருக்கும் வயோலாவுக்கு எல்லோ மேரியைப் பிடிக்காமல் போகிறது. எல்லோ மேரி ஓரினச் சேர்க்கையாளர் என்பதும் அவள் பாலியல் தொழில் செய்கிறாள் என்பதும் காரணமாகிறது.

தீவில் நானா என்கிற மூதாட்டி இருக்கிறார். இந்தக் கதையைத் தாங்கும் தூண் இவர். தன்னுடைய மூதாதையர்கள் மீதும் தங்களது வேர்களின் மீதும் கடும் பற்றுக்கொண்டவர். முன்னோர் வழிபாட்டினையும் சடங்குகளையும் விடாமல் கடைபிடிப்பவர். தன் இனமக்கள் தீவிலிருந்து கிளம்பிப் போவதில் இவருக்கு இஷ்டமில்லை. ஆனால் தடுக்கவும் முடியாமல் இருக்கிறார்.

மற்றொரு தம்பிதியினர் யூலா – ஏலி. யூலா கர்ப்பமாக இருக்கிறார். தீவில் இருந்த வெள்ளையர் ஒருவர் யூலாவைப் பாலியல் ரீதியாகத் தாக்கியிருப்பார். அதனால் பிறக்கப் போகும் குழந்தை தன்னுடையதுதானா என்கிற குழப்பம் ஏலிக்கு இருக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவும் கதையும் உண்டு. கடைசியாக இவர்களில் யார் தீவிலிருந்து வெளியேறுகிறார்கள், யார் அங்கு தங்குகிறார்கள் என்பதே படத்தின் கதை. வெறும் கதை சொல்லலாக இல்லாமல் பெரும் வரலாற்றையும், ஓர் இனத்தின் அத்தனை வெளிப்பாடுகளையும் சொன்ன விதம்தான் படத்தினை இன்றளவும் பேச வைத்திருக்கிறது.

எந்தவொரு திரைக்கதை வடிவத்துக்குள்ளும் அடங்காத பெரும் பாய்ச்சல் இந்தப் படத்தின் கதை சொல்லும் முறைக்கு இருக்கிறது. படத்தில் அங்கங்கே பின்னணிக் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அதில் ஒன்று யூலாவுக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் குரல், மற்றொன்று நானாவின் குரல். பிறக்கப்போகும் குழந்தை எதிர்காலத்தில் என்ன நடந்தது என்பதையும், நானாவின் குரல் மறைந்துபோன காலத்தின் நினைவுகளையும் கூற கதை நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும்.

ஜூலி டாஷ் ஆய்வில் கவனம் செலுத்துபவர். ஒரு தீவு உருவானதையும், அதன் மக்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியதுமான நூற்றாண்டுக் கால வாழ்க்கையினை அவர் சொல்லியிருக்கிறார். அதை நேர்க்கோட்டில் சொல்லாமல் தேவைப்படும் இடங்களில் மட்டும் வசனங்களைக் கொண்டுவந்திருக்கிறார். பேஜெண்ட் இன மக்களான இவர்கள் தங்களின் பெயருக்குப் பின்னால் பேஜெண்ட் என்று சேர்த்துக்கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். பேஜெண்ட் இனத்தின் மூன்று தலைமுறையினரின் மனஓட்டங்களைப் பதிவு செய்கிறபோது ஜூலி எதையும் நியாயப்படுத்தவில்லை. இது சரி என்றும் தவறு என்றும் ஆய்வு செய்யவில்லை. எல்லாருக்குமே அவரவர் தரப்பு நியாங்களைச் சொல்ல இடமளித்திருக்கிறார். இந்தப் படம் வெளியானது 1991ஆம் ஆண்டு. கதை நடப்பது 1903இல். கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுக்காலம் முன்னோக்கிச் சென்று பதிவு செய்வது என்பது சாதாரணமானதல்ல.

பல சடங்குகள், சைகை மொழியில் சண்டை செய்வது, வேர்களைப் பற்றிப் பேசுவது, அவர்களின் பாரம்பரிய மொழி போன்றவை புரியாவிட்டாலும் அதன் உணர்வு நம்மை வந்தடைகிறது. காலப்போக்கில் இந்த இன மக்களே மறந்து போனதை ஆய்வு மூலமாகத் தேடிக்கொண்டுவந்து தந்திருக்கிறார் ஜூலி.

“நானே முதலும் கடைசியும். நானே ஆராதிக்கவும் தூற்றவும் படுகிறேன். நான் விபச்சாரி, புனிதமானவளும் கூட. நான் ஒரு மனைவி, கன்னியும்தான். நான் தரிசு; பல மகள்கள் எனக்குண்டு. நான் மௌனம். உங்களால் என்னைப் புரிந்துகொள்ள முடியாது. நானே எனது பெயர்”

இப்படி ஒரு குரல் பின்னணியில் ஒலிக்க, தொடங்குகிறது படம். பேசியவர் நானா என்பது தெரிகிறது. இந்தக் குரலின் அத்தனை அடையாளமாகவும் நானா இருக்கிறார். தீவினை விட்டுப் புது வாழ்க்கைத் தேடிப் போகும் ஒவ்வொருவரும் மூதாதையை மறந்துவிடுவார்களோ என்கிற அவரது ஏக்கம் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படுகிறது. “நம் உடலில் ஓடுவது சரிபாதி உப்பு நீர். நாம் இந்த உப்புக் காற்றால் ஆனவர்கள்” என்கிறார்.

நானா அற்புதமான கதாபாத்திரம். யூலா பாலியல் ரீதியாகப் பலவந்தம் செய்யப்பட்டதைப் பெரும் துக்கத்துடன் ஏலி நானாவிடம் சொல்லும்போது, அவர் அதற்கு முன்பு தங்களின் இனம் கண்ட பெரும் வலியை நினைத்துப் பார்க்கச் சொல்கிறார். அவர்களின் உறுதியில் இருந்தே நாம் இன்று வாழ்கிறோம் என்கிறார். ஆனால், ஏலியால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கசப்புடனும் ஆவேசத்துடனும் ஏலியிடம் அவன் தீவிலிருந்து கிளம்பி வெள்ளை இன மக்களுடன் வாழப்போவது கொடுங்கனவு போல மாறப்போகிறது என்பதை மறைமுகமாகச் சொல்கிறாள். ஏலிக்கு இது கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், இதே நானாதான் தனது வம்சாவழியினர் தீவிலிருந்து கிளம்பும் அன்று அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து அனுப்புகிறாள். அந்த நேரத்தில் நானா பேசும் ஒவ்வொன்றும் ஒரு முதுதாயின் வார்த்தைகள்.

எல்லோ மேரி தீவுக்குள் வந்ததும் அவளை அனைவரும் ஒதுக்குகிறார்கள். அதை அவள் கம்பீரமாக எதிர்கொள்கிறாள். ‘என்னுடைய வேரினைத் தேடி வந்தேன்’ என்கிறாள். அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியிலும் எது ‘வேசித்தனம்’ என்கிற கேள்வி இருக்கிறது. அலைகழிக்கப்பட்ட நாட்களை நினைவுகூருகிறாள். எல்லோ மேரிக்காக ஆதரவு தரும் ஒரே பெண்ணாக யூலா இருக்கிறாள். “எல்லோ மேரியைத் தூற்றுபவர்கள் என்னையும் தூற்றுங்கள்.” என்கிறாள். தீவுக்குக் கடைசி விடைகொடுக்க வரும் எல்லோ மேரி நானாவுடன் அங்கேயே தங்குகிறாள். அவளது காதலி மட்டும் ஏக்கப் பார்வையுடன் அங்கிருந்து கிளம்புகிறாள்.

கடந்த காலத்தின் சாட்சியாக இருக்கும் முஹம்மது பிலால் என்கிற முதியவர் மெதுவான குரலில் சொல்கிறார், “தண்ணீருக்குள் எங்கள் மூதாதையர் நடந்து போனதாகச் சொல்கிறார்கள். யாராலும் தண்ணீருக்குள் நடக்க முடியாது. அவர்கள் தண்ணீருக்குள் மூழ்கினார்கள். எவரும் திரும்பவேயில்லை.” அதிகம் பேசாத அவர் தன் மூதாதையரின் வார்த்தையாகச் சொல்வது “பெண்கள் மட்டுமே வாழ்க்கையின் இனிமையைத் தர முடியும். அவர்களை ஒருபோதும் கைவிட வேண்டாம் என்றார்கள். இது மட்டும்தான் அவர்கள் சொற்களில் இருந்து எனக்கு நினைவிருப்பது” என்கிறார்.

அழிந்துபோன தங்களை, தாய்மொழியை அறியாது ஆங்கிலம் பேசும் ஓர் இனம் தீவிலிருந்து எதைத் எடுத்துப் போவது, எதை விட்டுச் செல்வது எனத் திணறுகிறது. “என்னிடமிருந்து எனது ஆவியை எடுத்துச் செல்லுங்கள்… அது உங்களுக்கு வழிகாட்டும்” என்கிறார் நானா. தான் மட்டுமே இனி எஞ்சி நிற்கப்போகும் பழைமையின் சாட்சி என்பதால் இந்த வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்படுகின்றன. கிறித்தவத்தைத் தீவிரமாகப் பின்பற்றி மற்றவர்களையும் அதை நோக்கி ஈர்க்கும் வயோலா கூட இறுதியில் தன்னுடைய மூதாதைக் கடவுளர்களிடம் தஞ்சமடைகிறாள். புதுக்கடவுள், புதுமதம், புதுநிலம், புதுமொழி, புதுக்கடல் எனப் புறப்படும் தனது விழுதுகளை நானா பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியோடு படம் நிறைவுபெறுகிறது.

ஜூலியின் குறும்படங்களிலும், இந்தப் படத்திலும் ஒளிப்பதிவு வேறோர் இடத்தினைப் பெற்றுவிடுகிறது. வண்ணங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறார் ஜூலி. கடற்கரையில் ஸ்நெட் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படமும் அதற்கு வைக்கப்பட்டிருக்கிற கோணங்களும் வேறொரு பரிமாணத்தைக் காட்டிவிடுகிறது.

ஜூலி டாஷ் இரண்டு நாவல்களை எழுதியிருக்கிறார். ஒன்று இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டதன் பின்னணியை வைத்து. மற்றொன்று, இங்கிருந்து கிளம்பிப் போனவர்கள் இருபது வருடங்களுக்குப் பிறகு எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பது பற்றி.

இதற்குப் பிறகு ஜூலி முழுநீளத் திரைப்படம் எதையும் இயக்கவில்லை. மீண்டும் தொலைகாட்சித் தொடர்கள், இசை ஆல்பங்களில் கவனம் செலுத்திவருகிறார். ஆனால், என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்கிறார். இவருடைய அத்தனை படைப்புகளுமே வரலாற்றினை ஆழப் புரிந்துகொண்டு வெளிப்படுபவையாக இருக்கின்றன.

“இயக்குநராக இருப்பதைவிட சுலமபமானது ஆய்வாளராக இருப்பது. ஆய்வாளர்களின் பணியை நான் திரையில் காட்டிக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் என்னுடைய படைப்புகளில் மானுடவியல் குறித்த ஆய்வுகள் மேல்நோக்கியிருக்கும். ஒவ்வொருவரும் அவரவர் வேரினை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு நான் சற்று உதவுகிறேன்.” எதற்காக இயக்குகிறார் என்பதற்கு ஜூலி தந்த பதில் இது.

இவருடைய பதில் பார்வையாளர்களைச் சிந்திக்க வைக்கிறது, படைப்பாளர்களை உத்வேகப்படுத்துகிறது. இவருடைய எல்லாப் படைப்புகளையும் பார்க்கையில் நானா பேஜெண்ட்டும் ஜூலி டாஷும் வேறல்ல என்றே தோன்றுகிறது.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!