தமிழர்களின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம் (அகத்: 18) நால்வகை நிலங்களுக்கான கருப்பொருட்களைக் கூறும்போது, அனைத்து வகை தோற்கருவிகளின் பொது அடையாளமாக, பொதுப்பெயராகப் பறையைக் குறிப்பிடுகிறது. இப்பறையானது முரசு, முழவு, பணை, துடி உள்ளிட்ட பிற தோற்கருவிகளின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக இருந்துவந்ததோடு அல்லாமல், தோற்கருவிகளுக்கெல்லாம் முன்னோடியாகவும் இருந்துள்ளது. இதனை தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலான நூல்களுக்கு உரைவகுத்த உரையாசிரியர்கள், பிறவகை தோற்கருவிகளையும் பறை (முழவுப்பறை, முரசுப்பறை, துடிப்பறை) என்று அழைத்திருப்பதைக் கொண்டே அறியலாம். போலவே, பறையை உருவாக்கி இசைத்த பறையர்களும் தமிழனத்தின் முன்னோடியாகவே கருதப்படுகின்றனர். சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு, தமிழினத்தின் பூர்வீக குடிகளைக் கூறுமிடத்து, ‘துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை’ (புறம். 335) என்கிறது. சங்ககாலத்திலும் அதற்கு முன்னேயும் வாழ்ந்த பழைமையான பெருங்குடிகளாக இந்நான்கு குடிமுறைகளைப் புறநானூறு சான்று பகர்கிறது. இவற்றில் துடியன், பாணன், கடம்பன் எனும் குடிமுறைகள் பிற்காலத்தை நோக்கி நகரவில்லை. பறையர் குடி மட்டுமே பிற்காலத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. மேலும், துடியன், பாணன், பறையன் எனும் குடிகள் இசைக் குடிகளாகவும் கடம்பன், இசைக்குத் தொடர்பில்லாத குடியாகவும் அறியப்படுகிறது. இத்தகைய நான்கு பூர்வீக குடிமுறை அடையாளத்தில் ‘பறையன்’ குடி மட்டுமே தற்காலத்தில் இருந்துவருவதைப் பார்க்கும்போது, பறையர் எனும் பெரும் அடையாளத்தில் பிற மூன்று குடிகளும் கரைந்திருக்க வேண்டும் என்று கருத இடமுள்ளது. இவ்வினக் குழுக்களின் கலப்பு என்பது, இசைக் குழுக்களாகவும் கூட்டிசை வடிவமாகவும் செயல்பட்டதன் அடிப்படையிலேயேயாகும். பறையர், பறையை மட்டுமே இசைக்காமல் பாணர்களுடன் இணைந்து பாடுநர்களாகவும், பாடலுக்குப் பக்கவாத்தியக் கருவிகளை இசைப்பவர்களாகவும், துடியர்களுடன் இணைந்து பிற தோற்கருவிகளை இசைக்கக் கூடியவர்களாகவும் மாறியதன் அடிப்படையே இனக்கலப்பிற்கும் அடிப்படை ஆதாரமாக அமைந்திருந்தது எனலாம். தமிழகத்தின் பூர்வ குடிகளான பறையர்கள், இசையை வளர்த்தெடுத்தது மட்டுமல்லாமல், காலத்தைக் கணிக்கும் நிமித்திகர்களாகவும், தமிழ்மறை நூல்களைக் கற்றறிந்தவர்களாகவும், இசைக்கருவிகளைத் தயாரிப்பவர்களாகவும் திகழ்ந்துள்ளனர்; பெரும்நிலங்களைப் பெற்றிருந்த நிலவுடைமையாளர்களாகவும், அரசவை அமைச்சர்களாகவும், பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த மன்னர்களாகவும், கோயில் பூசகர்களாகவும் இருந்துவந்துள்ளனர். இவ்வகையில் சங்க காலத்தில் குடிமுறைகளாக, இனக்குழுக்களாகச் சாதிய அடையாளம் இன்றி வாழ்ந்த மக்கள், சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தொழிற்முறையின் அடிப்படையில் சாதிய அடையாளமாகப் பிரிக்கப்பட்டனர். இதனடிப்படையில் பறையர் எனும் பெரும் அடையாளத்திற்குள் உழவுச் செய்பவன் உழுப்பறையன் என்றும், சோதிடம் பார்ப்பவன் வள்ளுவப் பறையன் என்றும், கோட்டைக்கட்டி வாழ்பவன் கோட்டைப் பறையன் என்றும் எண்பதுக்கு மேற்பட்ட சாதியப் பிரிவுகள் ஏற்பட்டுள்ளன.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then