எருமை மறம்

மௌனன் யாத்ரிகா

வேட்டை நாயின்
கண்களில் ஆடும் தழலை
வெறித்துக்கொண்டிருந்தான் கரியன்;
திரும்பத் திரும்ப
அவனுடைய மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன
இரண்டு குதிரைகள்;
சருகுகளில் தெறித்திருந்த
உறைந்த குருதியில்
செந்நாய்கள் நாக்கைப் புரட்டும் காட்சியும்,
கொல்லப்பட்டவனின் மண்டையோட்டில்
உறங்கும் வண்டைப்போல் தெரியும்
கருந்துளையும்,
காட்டின் எல்லைப்பகுதியில்
அழுந்தப் பதிந்திருந்த
குளம்படிகளின் வெப்பமும்
கரியனின் நிலைத்த விழிகளை
இமைக்க விடாமல் செய்திருந்தன.

பொந்துகளில் அமர்ந்தபடி
ஊரைக் கண்ணுற்ற ஆந்தைகள்
ஒவ்வொன்றாக வெளியேறிக்
குடியிருப்புகளின் நாற்புறமும் அமர்ந்தபோது
வேட்டை நாயின் உடம்பு சிலிர்த்தது;
அதன் கண்கள் உக்கிரம் கொண்டன;
காதுகள் விடைத்து விரிந்தன;
கூகைகளின் இருப்பு
நாயின் பதற்றத்தை அதிகரித்ததை
உணர்ந்த கரியன்
தீயில் வெடிக்கும் விறகுகளிலிருந்து
பறக்கும் கங்குகளின் ஊடாகத்
தம் கூட்டத்தைக் கண்டான்.

வேட்டைத்தடி நொறுங்குமளவுக்கு
இறுகப் பற்றியிருந்த மறவோன்
அதனைத் தரையில் ஓங்கிக் குத்தினார்;
பெயர்ந்த மண் துகள்கள் எகிறிப் பறந்தன;
பற்கள் நறநறக்க அவர் உறுமினார்;
அவருக்கு முன்பிருந்த பெருங்கல் மீது
வரையப்பட்டிருந்த சித்திரத்தில்
மோதிக்கொண்டிருந்த எருதுகள்
ஆவேசம் மூண்டு; மூர்க்கமேறி
கொம்புகளைச் சிலுப்பின.

“செருக்களம் நமக்குப் புதிதன்று;
காற்றோடும் நீரோடும் தீயோடும்
போராடி வென்றவர்கள் நாம்;
கழுதைப்புலிகள் வழிமறிக்கும் பாதையில்
உணவு சேகரிக்க
நம் கிழத்திகள் அன்றாடம் போய் வருகின்றனர்;
ஓநாய்கள் கூட்டமாகத் தங்கும்
குகைகளின் சுவர்களில்
குலக்குறியின் பெயரெழுதும்
வேட்டுவர்கள் நாம்;
தனக்குத் தானே பேறு பார்த்துக்கொள்ளும்
நம் தாய்வழிச் சமூகத்தின்
தொப்புள் கொடியை அறுக்க
எந்தக் கொம்பனும் பிறக்கவில்லை;
இந்தக் காட்டிலும்
அது சார்ந்த சமவெளியிலும்
நூறு இனக்குழுக்கள் இருந்தாலும்
அனைத்தும் ஒரு திணையின் குடிகள்;
புலியின் வழித்தடமும்
உடும்பின் வழித்தடமும்
வேறு வேறாக இருந்தாலும்
இந்த உயிர்களின் புகலிடம் காடுதான்;
சகப் பழங்குடியின் மரணம்
நம் காட்டுக்கு விடப்பட்டிருக்கும்
எச்சரிக்கை;
கழுத்துப்பட்டை போடப்பட்ட
நீண்ட உடலமைப்புடைய நாய்கள்
குரைத்துச் சுற்றும் நிலப்பகுதியில்
புதிய குடியிருப்புகள் முளைத்துள்ளன;
அங்கே
இரவு முழுக்க அணையாத
பெரிய பந்தங்கள் எரிகின்றன;
தரையை உதைக்கும் குதிரைகளின் காலடிகள்
நம் காடு வரை
அதிர்வை உருவாக்குகின்றன;
எருமைகளைவிட மூர்க்கமாகக் கத்தும்
கறுப்பு எந்திரங்களின் புகை
காற்றில் கலந்திருப்பதைக் காண்;
குடிகளே கேளுங்கள்!
காலாதிக் காலனை
உசுப்பும் பறையை முழங்குவோம்;
நமது வெறியாட்டுக் கேட்டு
எதிரியின் மூத்திரப்பை உடையட்டும்;

பண்டுவனும் கணியனும்
அமைதியாய் வீற்றிருக்க,
பாணர்களின் தமிழ்
நரம்பை முறுக்கேற்றியது;
நெருப்பின் கொழுந்தை
எண்ணெய் ஊற்றி
மலரச் செய்தனர் பெண்டிர்;
முதுமகளின் கண்கள்
நட்சத்திரங்களை உற்றுநோக்கின;
மேகங்கள் இல்லாத வான்
மிதக்கும் கடல்போல் தெரிந்தது;
சகுனம் கேட்க விடைத்த
அவளுடைய காதுகள்
வளரும் நிலவொளியில்
ஒரு பூவரசம் பூவைப்போல் அசைந்தன;
காளையரின் குதிகால் மிதிக்கு
வேர்கள் மருண்டன;
பாறைகளில் படர்ந்திருந்த கொடிகள் அறுந்தன;
வேட்டை நாய்களின் தொடைகள்
இறுகின;

கரியன் எழுந்து கூட்டம் புகுந்தான்.

(தொடரும்…)

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!