அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அரசியல் போராட்டத்தின் வலிமையான கருவிகளாக எப்போதும் விளங்குகின்றன. சமூகம், அரசியல், பொருளாதாரம், சட்டம் என எந்தக் களமானாலும் அம்பேத்கரின் ஆராய்ச்சி உலைக்களத்தில் வடித்தெடுக்கப்பட்டுப் பட்டை தீட்டிக் கூர்முனையோடு அறிவுக் கிடங்கில் தயாராய் இருக்கும் கருவிகளிலிருந்து ஒரு கருவியை உருவிச் சுழற்றி யுத்தம் செய்து வெற்றி பெற்றுவிட முடியும். நிராயுதபாணிகளான தலித்துகளுக்குத் தன்னையே ஆயுதமாக்கித் தந்தவர் அம்பேத்கர். அவர் கையளித்து விட்டுச்சென்ற ஆயுதங்களில் வலிமையான தத்துவப் பேராயுதம்தான் பௌத்தம். அம்பேத்கரைத் தவிர வேறு யாராலும் களத்திலேந்திச் சுழற்றப்படாத இந்த ஆயுதத்தின் வலிமையைக் களமாடும் பலரும் உணர்வதில்லை. களமாட வேண்டிய செயல்வீரர்கள் எதிரியின் ஆயுதம் கூர்மையானது என்று எண்ணித் தயங்குகின்றனர். அது அவ்வளவு கூர்மையானது இல்லையென்றாலும் அவர்களின் போர்த்தந்திரங்கள் அவர்களுக்கு வெற்றியை ஈட்டித் தந்துவிடுவதை ஆயுதத்தின் வலிமை என்று மயங்கித் தம் கைகளில் இருக்கும் ஆயுதத்தை ஏந்துவதற்குக் காட்டும் தயக்கம் இது. இந்த ஆயுதத்தை எவ்வாறு கையாளுவது என்பதைப் பலரும் அறிவதில்லை. அறியாமை என்னும் கொடிய நோய் எந்த உயிரையும் எளிதில் சாகடித்துவிடும். அறியாமையிலிருந்து நகர்ந்து அறிதலை நோக்கி வருவதற்கு மனத்துணிவு வேண்டும். பௌத்தம் என்னும் தத்துவப் பேராயுதம் இயல்பிலேயே அந்த மனத்துணிவைத் தரும் ஆற்றல்கொண்டது. பௌத்தம் என்னும் பேராயுதத்தை ஏந்திக் களத்தில் நிற்பதற்கே பெரும் மனவலிமை வேண்டும். ஆயுதங்களின் வலிமை எப்போதும் அதை ஏந்தி நிற்பவர்களின் மனவலிமையையும் பொறுத்துத்தான். அம்பேத்கருக்கு அந்த மனவலிமை எப்போதும் உண்டு. அம்பேத்கருடைய மனவலிமையின் உச்சத்தை பு956-ஆம் ஆண்டு அக்டோபர் பு4-ஆம் நாள் உலகமே பார்த்தது.
2021-ஆம் ஆண்டோடு அம்பேத்கர் ஐந்து லட்சம் மக்களுடன் சேர்ந்து பௌத்தம் தழுவி அறுபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இது குறித்து ஆதரித்தும் எதிர்த்தும் பல ஆய்வுகளும் ஆய்வுகள் என்ற பெயரில் அவதூறுகளும் வெளிவந்துகொண்டேயிருக்கின்றன. மாறுபட்ட இந்தக் கருத்துகள் தலித் சமூகத்திற்கு வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் வருகின்றன. இவை எல்லாம் சேர்ந்து அம்பேத்கரை வாசிக்கத் துவங்குகிற இளந்தலைமுறையினரைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. தற்போதைய ‘தகவல்களின் காலத்தில்’ சமூக ஊடகம் வாசிப்பதற்கான பல வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றன. ஆனால், கணக்கிலடங்காதபடிச் செய்திகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. எதைக் கொள்ளுவது, எதைத் தள்ளுவது என்று புரியாமல் தத்தளிக்கிற நிலைமைதான் எங்கும். இந்தச் சூழலில், அம்பேத்கரின் பௌத்தம் குறித்த சரியான புரிதலை வழங்கிட முயற்சிப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம். அப்புரிதலை அடைவதன் முதல்படியாக அம்பேத்கர் மதம் மாறும் முடிவை எடுத்ததற்கான வரலாற்றுப் பின்புலத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then