“வாழ்க்கையை நிமிடங்களுக்குள் அடைத்துவிட முடியாது” – பெலா தார்

தமிழில்: ராம் முரளி

மையநீரோட்டத் திரைப்படங்களின் பண்புகளுக்கு முற்றிலும் எதிராக அதிகச் சலனமில்லாத, இடைவெட்டில்லாத நீண்ட காட்சிப் பதிவுகளைக் கொண்ட திரைப்படங்களை வரலாறு நெடுகப் பல படைப்பாளிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இவ்வகையிலான திரைப்படங்கள் உண்மையைக் கூடுமானவரையில் நெருங்கிச் செல்வதோடு, பார்வையாளர்களின் ஆழ்ந்த உள்வாங்கலையும் கோருவதாக இருக்கின்றன. நிகழ்வுகளின் புறவயமான யதார்த்தம் பார்வையாளர்களுடன் அகவயமான ஒரு பந்தத்தைப் பின்னிக்கொள்கின்றன. ஆந்த்ரே தார்கோவஸ்கி, தியோ ஆஞ்சலோ பொலீஸ், அலெக்ஸாண்டர் சுக்குரோவ், பெலா தார் போன்றோரின் திரைப்படங்களை இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம். இதில் பெலா தார் (Bela Tarr) ஹங்கேரி தேசத்தைச் சேர்ந்தவர். வாழ்வின் இருண்ட பகுதிகளே இவரது திரைப்படங்களில் மையமாக இருந்திருக்கின்றன. ‘வாழ்க்கையை நிமிடங்களுக்குள் அடைத்துவிட முடியாது’ என்று சொல்லும் இவர் தனது நீண்ட காட்சித் தொடர்களின் மூலம் நம்பிக்கைகளின் வீழ்ச்சியையும், மனிதர்கள் வாழும் சூழல் எப்படிச் சிறுத்துக்கொண்டே போகிறது என்பதையும், கிட்டத்தட்ட தப்பிப்பதற்கு வாய்ப்பே இல்லாத ஒரு மூடுண்ட சூழமைவிற்குள் மனிதர்கள் விழுந்திருக்கிறார்கள் என்பதையும் மீண்டும் மீண்டும் பதிவாக்கியிருக்கிறார். சோஷியலிசத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு கிழக்கு ஐரோப்பியச் சமூகங்களில் நிகழ்ந்த மாற்றங்களே இவரது திரைப்படங்களின் அடித்தளமாக இருக்கின்றன. இவரது படங்களில் மனிதர்கள் ஒருவர் மற்றவரை வீழ்த்தி மேலேற்றம் பெற நினைக்கிறார்கள். துரோகமிழைத்துக்கொள்கிறார்கள். வாழ்வதற்கான சிறு வெளிச்சத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

பிறகு, மீண்டும் நம்பிக்கை சிதைந்து வீழ்ச்சியடைகிறார்கள். நிறத்தைக் கூடப் போலியானதாகக் கருதுவதால் தமது பெரும்பாலான படங்களைக் கறுப்பு வெள்ளையிலேயே இயக்கியவர் பெலா தார். இவரது ஏழு மணிநேரத் திரைப்படமான ‘Satantango’ வெறும் 185 காட்சித் துண்டுகளால் எடுக்கப்பட்டது. கைவிடப்பட்ட ஒரு கூட்டுப் பண்ணையில் எஞ்சியிருக்கக் கூடிய மனிதர்களை அங்கிருந்து தப்பிச் செல்வதற்காகப் பண்ணையின் பங்குகளைத் தமக்குள் பங்கிட்டுக்கொள்வதும், அதில் ஒருவருக்கொருவர் துரோகமிழைத்துக்கொள்வதும், இறுதியில் மீளும் கதியற்று அதே பாழ்நிலத்தில் கைவிடப்படுவதும் அத்திரைப்படத்தின் கதைச் சரடாகும். அமெரிக்க நாவலாசிரியர் சுஸன் சொன்டாக் இத்திரைப்படத்தைத் தனது வாழ்க்கையில் ஒவ்வொரு வருடமும் பார்ப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். 1899இல் நீட்சே துரின் நகரில் தங்கியிருந்தபோது ஒரு குதிரையோட்டியை எதிர்கொள்கிறார். அந்தக் குதிரையோட்டி தனது குதிரையைத் தாக்குவதைப் பார்க்கும் அவர், அவனைத் தடுத்து அக்குதிரையைத் தழுவிக்கொண்டு கண்ணீர்விட்டு அழுகிறார். பிறகு தீவிர மனப் பிறழ்வுக்கு ஆளாகிறார். நீட்சேவின் வாழ்வில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்தச் சம்பவத்தின் இன்னொரு முனையை, அதாவது அதன் பிறகு அந்தக் குதிரைக்கும் குதிரையோட்டிக்கும் என்ன நிகழ்ந்தது என்பதைக் கருவாகக்கொண்டு பெலா தார் உருவாக்கிய திரைப்படம் ‘The Turin Horse.’ மிகச் சொற்பக் காட்சிகளில் மட்டுமே உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் அவரது திரைப்படங்களிலேயே சிறந்த படைப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதுவே பெலா தாரின் இறுதிப் படமுமாகும். ‘The Turin Horse’க்குப் பிறகு திரைப்படங்களை இயக்குவதிலிருந்து ஓய்வு பெற்றவர் தற்போது பல திரைப்படக் கல்லூரிகளில் பாடம் புகட்டுவதோடு வெவ்வேறு கலைச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டுவருகிறார். பெலா தாரின் வெவ்வேறு நேர்காணல்களிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட கேள்வி – பதில்களே இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!