டமுக்கெலும்பு – முத்துராசா குமார்

ஓவியம்: வெங்கடேஷ்

‘…வரப்புகள் மக்கிய பெருந்தரிசின் நடுவில், பங்குனி மதியத்தின் அக்னியை உறிஞ்சியபடி நாதியற்றுக் கிடக்கிறது டமுக்கு வாத்தியம். டமுக்கில் சுத்தப்பட்ட சிவப்புக் கோடிப்பட்டின் மினுப்பு கானல்நீரில் வளைந்து வளைந்து தென்படுகிறது. டமுக்கின் தேய்ந்த தோல் வார்கள் பக்கத்தில் கிடக்கின்றன. மொட்டைக் கிணத்தோரம் பச்சையமற்று மூளியாக நிற்கிறது வேம்பு. உச்சிமரவாப்பில் நிற்கும் கந்தனின் நொட்டாங்கையில் படர்ந்த தேக்கயிலை காற்றுக்குச் சடசடக்கிறது. உயிரைக் குடிக்கும் அரளியுருண்டைகள் இலையைப் பறக்கவிடாமல் அதன் மேல் மணத்துக் கிடக்கின்றன.

கீழே நின்று கெஞ்சிக் கதறுகிறாள் கந்தனின் மகள்வழி பேத்தியாள். கந்தனை விழ வைக்க தனது சத்துக்கு ஏற்றபடி மரத்தை உலுப்பிக் கதறுகிறாள். மரம் கொஞ்சங்கூட அசையவில்லை. விரிசல் தரிசின் கரம்பைக் கட்டிகளைப் பெயர்த்து அவரின் நொட்டாங்கைக்குக் குறி வைத்து எறிகிறாள். அது வேறு எங்கோ போய் விழுந்துடைந்து மண்ணாகிறது. தொண்டைக்குள் அழுதபடி தூரைச் சுற்றிச் சுற்றி வந்து மரப்பட்டைகளைப் பிராண்டுகிறது மூச்சிறைப்பு வியாதி கொண்ட அவர்களின் வளர்ப்பு நாய். கீழே இறங்காமல் பேத்தியைப் பார்த்து அழுகிறார். மிகவும் ஒடுங்கிய அவரது சங்குக்குழியில் கண்ணீர் தேங்குகிறது. வியர்வையில் அவரின் உள்ளங்கால்கள் பிடிமானத்திலிருந்து நழுவுவதை உணர்ந்துகொண்டு பாதங்களை மேலும் இறுக்கிக்கொள்கிறார். உதடுகளின் விளிம்புக்குள் கண்ணீர் புகுந்து கரித்தவுடன், “யெறங்கு தாத்தா…” என ஓங்கி சத்தமிடுகிறாள். கத்தியதில் அவளை அறியாமலேயே இரண்டு மூன்று மூத்திரச்சொட்டுகள் பாவாடையில் கசிகின்றன.

முரட்டுச் சால்வையுடன் தூரக் கிடங்கில் வருத்தாடுகளுக்குத் தண்ணீர் காட்டிக்கொண்டிருந்த முதுகீதாரி, சத்தம் கேட்டு அவளின் திசைக்கு ஓடிவருகிறார். வந்தவர் எதுவும் பேசாமல் கந்தனின் ஈரக்கண்களையே பார்க்கிறார். கீதாரியின் அருகில் வந்து அவரை முகர்ந்துவிட்டு மறுபடியும் மரத்தூருக்கு ஓடுகிறது நாய். திரும்ப அதே ஓட்டத்தில் கிடைக்குப் போகிறார் கீதாரி. சீக்குப் புகுந்த ஆடுகளின் நாக்குகளை அத்துத் தனது சால்வையில் கட்டிவந்து அவளின் முன்னால் கொட்டுகிறார். நாக்குகள் தரையில் துள்ளுகின்றன. என்ன செய்வதென்று தெரியாமல் அங்குமிங்கும் குதிக்கும் நாய், நாக்குகளிடம் நெருங்கவில்லை. கந்தனும் பேத்தியும் நாவுகளின் துள்ளல் வேகத்தைக் கவனிக்கின்றனர்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!