அது முதலாம் உலகப் போர் முடிந்திருந்த காலம். 1917இல் போல்ஷ்விக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றி, சோவியத் யூனியன் என்றொரு புதிய தேசத்தை நிறுவியிருந்தனர். இதனால் அனைத்து மட்டங்களிலும் பற்பல மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருந்தன. கம்யூனிஸக் கொள்கையை மக்களிடத்தில் பரவலாக்கம் செய்யும் பணி தீவிர கதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கலைச் செயல்பாடுகளும் அப்பணியில் ஓர் அங்கமாகக் கைக்கோர்த்து நிற்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதிலும், தேசியத் திரைத்துறையை வளர்த்தெடுப்பதில் சோவியத் யூனியன் மும்முரமாகச் செயலாற்றிக் கொண்டிருந்தது. மக்களுக்கு கம்யூனிஸத்தின் நற்பண்புகளைக் கற்பிப்பதற்கு ஏற்றதொரு சிறந்த ஊடமாகத் திரைத்துறையைப் பயன்படுத்த லெனின் திட்டமிட்டிருந்தார். தீவிரப் பிரச்சாரத் திரைப்படங்கள் ஊக்குவிக்கப்பட்டன. புடோவ்கின், வெர்டோவ், ஐசென்ஸ்டீன், டோவ்ஜென்கோ போன்ற சோவியத் திரைப்படத் தயாரிப்பாளர்களும் முன்னணி இயக்குநர்களும் கோட்பாட்டாளர்களும் மக்களின் ஆழ்மனதில் கம்யூனிஸத்தின் விதைகளைத் தூவக் கடுமையாக முயற்சி செய்து வந்தனர்.
“வேறெந்தவொரு கலையை விடவும் சினிமா எங்களுக்கு மிக முக்கியமான கலையாகும்” என்பது லெனினின் மிகப் புகழ்பெற்ற வாசகம். அவா¤ன் இவ்வாசகம் இன்றும்கூட ரஷ்யாவிலுள்ள திரைத்துறை சார்ந்த பல கட்டடங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது. சோவியத் திரைப்பட வரலாற்றில் ஒரு மந்திரத்தைப் போல, திரைப்படங்களின் மீது வலுவான அரசியல் மற்றும் சிந்தாந்தக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதாக லெனினின் இவ்வார்த்தைகள் நிலைபெற்றிருக்கின்றன. சினிமாவின் மீதான லெனினின் நம்பிக்கை அந்தளவிற்கு வீரியமிக்கதாக இருந்தது. இதன் காரணமாக, 1919-இல் திரைப்படத் துறை நாட்டுடைமையாக்கப்பட்டது. 1922-இல் சோவியத் சினிமா அமைச்சகமான Goskino உருவாக்கப்பட்டது. அது சினிமாத் துறையின் ஒவ்வோர் அம்சத்தையும் கட்டுப்படுத்தத் தொடங்கியது.
திரைக் கலையின் ஆற்றல், சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சோவியத் அரசுக்கு அபரிமிதமான நம்பிக்கை இருந்தது. கம்யூனிஸத்தால் உருவேற்றப்படும் ஒரு சோவிய மனிதனை உருவாக்க, சினிமாவைப் போல வேறொரு தீவிரமான ஊடகம் இல்லை என்று அது கருதியது. அரசுக்கு ஏற்ற விசுவாசமிக்க தனிமனிதர்களை சினிமா உருவாக்கும், அவன் என்றென்றும் சோவியத் யூனியனுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருப்பான். இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் அரசுக்கும் படைப்பாளிகளுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. படைப்புச் செயல்பாட்டிற்குரிய முழு ஆதரவையும் கலைஞர்களுக்கு அரசு வழங்கும்; அதே நேரத்தில், கலைஞர்களும் தமது முழு ஆதரவை அரசுக்கு அளிக்க வேண்டும். இவ்விதியின்படியே அன்றைய ரஷ்யத் திரைத்துறை செயல்படலாயிற்று.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then


