2026இல் மீரா கதிரவன் இயக்கி வெளிவந்த ‘ஹபீபி’ என்ற திரைப்படம், ஒரு தமிழ் முஸ்லிமுக்கும் சராசரியான தமிழனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று சொல்கிறது. இஸ்லாமிய இளைஞனும் தமிழ் இளைஞனைப் போலவே காதலிக்கிறான், படிப்பில் தடுமாறுகிறான், தயங்குகிறான், தவறு செய்கிறான், தியாகம் செய்கிறான். வெளிப்படையாகப் பார்த்தால், இது மத நல்லிணக்கத்தின் முற்போக்கான சித்திரமாகத் தோன்றுகிறது. ஆனால், இங்கே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது: அந்தச் ‘சராசரியான தமிழ் இளைஞன்’ யார்? அவனுடைய வரலாறு என்ன? அவனது உடல், மொழி, உணவு, சடங்கு, குடும்பம், காதல், ஒழுக்கம் ஆகியவற்றில் எவை உண்மையில் ‘மதச்சார்பற்றவை’, எவை பெரும்பான்மை மத நம்பிக்கைகளால் இயல்பாக்கப்பட்டவை? இந்தக் கேள்விகளை எழுப்பாமல், ‘அவனும் நம்மைப் போலத்தான்’ என்று சொல்வது, வேறுபாட்டை அங்கீகரிப்பது போலத் தோன்றினாலும், உண்மையில் வேறுபாட்டை மறைக்கும் அரசியல் என்றே சொல்ல வேண்டும்.
திரைப்படத்தின் பிரச்சினை, முஸ்லிம் இளைஞனைச் சராசரி மனிதனாகக் காட்டுவதல்ல; அவனை அப்படிக் காட்டுவதற்கு இஸ்லாமியத் தன்னிலையை ஏன் மங்கச் செய்ய வேண்டும் என்பதுதான். ஒரு முஸ்லிம் இளைஞனால் காதலிக்கவும், தோல்வியடையவும், பயந்து பின்வாங்கவும், தியாகம் செய்யவும் முடியும்; அதே நேரத்தில் இஸ்லாமிய நம்பிக்கையோடு வாழும் மனிதனாகவும் இருக்க முடியும். இந்த இரு நிலைகளையும் ஒன்றாக ஏற்றுக்கொள்ள முடியாத இடத்திலேயே தமிழ் மதச்சார்பின்மையின் சிக்கல் ஆரம்பிக்கிறது.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then


