நந்தன் ஒரு மன்னனாக இந்தியா முழுவதும் அறியப்பட்டிருக்கிறார். அவர் பெயர் நீண்ட காலமாகப் புழங்கி வந்திருக்கிறது. அப்பெயரின் மருவிய, திரிந்த வடிவங்களோடும் பெயர்கள் இருந்திருக்கின்றன. நந்தன் பற்றிய கதை வரலாறாகவும், தொன்மமாகவும், நினைவுகளாகவும் இருக்கின்றன. அந்தக் கதை பிற மன்னர்கள் மீதும் நினைவுகள் மீதும் ஏறிக்கிடக்கின்றன. சமூகத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளும் நம்பிக்கைகளும் நந்தன் மீது விரவியிருக்கின்றன. இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது நந்தன் என்ற மன்னனோ, மன்னர்களோ இருந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வரலாற்றில் மன்னர்களைக் கண்டறிவதோ, அதற்கான சான்றுகளை உருவாக்குவதோ சாதி வரலாறுகள் பெருகி வரும் இக்காலத்தில் எளிது. நாம் அவற்றை முழுக்க எதிர்மறையாகவும் சொல்ல முடியாது. பெரும் வரலாறுகளில் கிடைக்காத உள்ளூர் வரலாறும், உள்ளூரின் வரலாற்றை யோசிக்கும் தன்மையையும் அவற்றிலேயே பார்க்க முடிகிறது. நாம் விரும்பினால் நந்தனுக்கும் அத்தகைய வரலாறு ஒன்றைக் கட்டியெழுப்ப முடியும். ஆனால், இந்த வரலாறு அதைச் செய்யவில்லை. நந்தனை தேடத் தொடங்கும்போது பல்வேறு திறப்புகளும் இணைப்புகளும் கிடைத்திருக்கின்றன. தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை அணுகுவதற்கான சாவியாக நந்தன் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அந்த வகையில் இந்த நூல் வரலாற்றை இறுக்கமில்லாமல் அணுக முயன்றிருக்கிறது. வாசிப்பின் பல்வேறு சாத்தியங்களுக்கு வழிவிட்டிருக்கிறது.
பொதுப்பெயர்:
நம்முடைய மரபில் ஒரு பெயர் பலரின் பெயராக நீடித்திருக்கிறது. பலருடையதாக வழங்கப்பட்ட பெயர் வரலாற்றில் ஒருவர் பெயராக மட்டும் மாற்றியும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், உள்ளூர் மரபில் “பொதுப்பெயர்” என்ற பண்பாடு முக்கிய பங்கை வகித்திருக்கிறது. ஒரு மனிதர் மேலான நிலையை அடையும்போது, அவரின் பெயரையோ அந்த நிலையின் பெயரையோ பொதுப்பெயராக ஆக்கியிருக்கிறார்கள். பிறகு, அந்த நிலையை அடைபவருக்குச் சொந்தமாக எந்தப் பெயர் இருந்தாலும் ஏற்கெனவே அறியப்பட்ட பொதுப்பெயரையே சூட்டியிருக்கிறார்கள். புத்தம், சித்தம், அந்தணம், சிவம், வள்ளுவம், ஔவை ஆகியவை இத்தகைய ‘நிலை’களின் அல்லது ‘தன்மை’களின் பெயர்களேயாகும். அதனை அடைவோர் புத்தராக, சித்தராக, அந்தணராக, சிவனாக, வள்ளுவராக, ஔவையாக அழைக்கப்படுகிறார். மணிமேகலை “எண்ணில் புத்தர்” என்று குறிப்பிடுகிறது. முயற்சி செய்வோர் யாரும் புத்த நிலையை அடையலாம் எனும்போது, அவர் புத்தர் ஆகிறார். அந்த வகையில் புத்தர் ஒருவரல்ல, பலர். ஆனால், வரலாறு புத்தரை ஒரு நபராகக் காட்டுகிறது. சித்தர்கள் பதினெட்டுப் பேர் என்கிறார்கள். இலக்கியங்களில்கூட ஒரே பெயரில் பலர் இருப்பதை இவ்வாறே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதேபோல ஒரு நிலையை அடைந்துவிட்டவரின் பெயர், அதேபோல் ஆகுபவருக்கும் சூட்டப்பட்டிருக்கிறது. அய்யனார், பெருமாள், முருகன் உள்ளிட்ட தெய்வப் பெயர்களை இதற்கான உதாரணங்களாகக் கொள்ளலாம்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then


