இன்று அதிகாலையில்
சுந்தரமூர்த்தியைத் திடீரென மகிழ்ச்சி பிடித்துக்கொண்டது.
வீட்டிலிருந்து பணிமனைக்கு
காற்றுவெளியினில் பயணம் போகிறார்.
கீயரையும் ப்ரேக்கையும் கடவுள் கவனித்துக்கொண்டார்.
வானம் “மெல்ல தூறவா?” என்று கேட்டது.
அவர் “இம்” கொட்ட, அப்படியே ஆனது.
“ராஜா” அவர் நாவில் வந்தமர்ந்தார்.
தோளினைச் சுற்றிக்கட்டிய அவ்வளைக்கரம்
ஒரு நட்சத்திர நடிகையுடையது.
சந்தோஷமென்றால் சந்தோஷம்
அப்படியொரு சந்தோஷம்
அலுவலகம் தாண்டியும் போகிறார்.
வேறெங்கோ போகிறார்.
அவர் சந்தோஷமாக இருப்பது அவருக்கே தெரியவில்லை.
ஆகவே அவ்வாறிருந்தார்.
மற்றபடி, அதற்கொரு காரணம் கேட்டால்
அவரெங்கு போவார் எம்மானே?
lisaikarukkal@gmail.com




