வாசல்

- பா.வெங்கடேசன்

அந்த மழைக் காலத்தில் கடைக்குக் காவலாக இரவு நேரங்களில் அதன் இழுத்து மூடப்பட்ட கதவின்முன் படுத்துக்கொள்வதில் ஹிரியண்ணாவுக்குப் பிரச்சினை உண்டாகிவிட்டிருந்தது. நுரையீரலில் சேர்ந்திருந்த ஆலைப் புகைப் படிவினால் நிரந்தர நோயாளியாகிவிட்டிருந்த அவனுடைய தந்தை மூன்று வருடங்களுக்கு முன் ராமர் கோவில் தெருவில் மிச்சமிருந்த தன்னுடைய பரம்பரை நிலத்தை, அதைச் சுற்றி வளைத்து மூச்சுத் திணறச் செய்துகொண்டிருந்த புதிய வணிகக் கட்டிடக் குவியல்களின் சுமை தாங்காமல் காஞ்சீபுரத்திலிருந்து இங்கே வந்து குடியேறிய ஒரு ஆயத்த ஆடையக முதலாளிக்குக் கிரயம் செய்து கொடுத்து அந்தப் பணத்தை நிரந்தர வைப்பில் போட்டு வட்டி வருமானத்திற்கு ஏற்பாடு செய்து வைத்ததோடு எட்டு வயதோடு படிப்பு ஏறாமல் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்ட தன்னுடைய மகனுக்கு (அப்போது அவனுக்கு வயது பன்னிரெண்டு) அந்தக் கடையில் ஒரு வேலை போட்டுக்கொடுக்கவேண்டும் என்று ஒரு நிபந்தனையையும் ஏற்கச் செய்து (ராமர் கோவில் தெருவில் ஒரு துண்டு நிலம் கிடைக்குமென்றால் மலத்தை நக்குவதற்கும் தயாராயிருந்த பணக்காரர்கள் இருக்கத்தான் செய்தார்கள்) ஒரு குறைந்தபட்ச பணி வருவாயையும் சாத்தியமாக்கிவிட்ட திருப்தியோடு அவனிடமும் அவன் அம்மாவிடமும் நிரந்தரமாக விடைபெற்றுக்கொள்வதற்குமுன் அவன் அந்த நிலத்திலிருந்த அவர்களுடைய சிதிலமடைந்த பழைய ஓட்டு வீட்டின் திண்ணையில், ஓசூரின் கடும்பனிக்குத் தாக்குப் பிடிக்கும் சாக்கு விரிப்புகளுக்குள்ளும் கம்பளிப் போர்வைகளுக்குள்ளும் தன்னைப் புதைத்துக்கொண்டு தூங்கியெழும் வழக்கத்தைக் கைக்கொண்டிருந்தான். நிலம் விற்றதற்குப் பிறகும், அதே நிலம் ஆனால் தன் முதலாளியின் கடை வாசலாக, அவனுடைய நிரந்தரத் திண்ணையாக ஆகிவிட்டிருந்தது. அவன் நாள் தவறாமல் இரவு நேரங்களில் அந்தக் கடை வாசலில்தான் தூங்குகிறான். கவனிக்க, காவலாக விழித்திருக்கறானென்று சொல்லப்படவில்லை, தூங்குகிறான் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. காரணம் பகலில் அவன் அந்தக் கடையிலேயே எடுபிடியாகவும் வேலை செய்துகொண்டிருக்கிறான். எனவே இரவில் தூங்கிவிட்டு விடியற்காலையில் எழுந்து வீட்டுக்குச் சென்று குளித்து சாப்பிட்டு உடை மாற்றிக்கொண்டு மீண்டும் கடைக்கு வேலைக்கு வந்துவிடுவான்.

மறுபடி இரவில் காவல் பணி. நகரத்தின் மிக மையமான தெரு என்பதாலும் காவலர் நடமாட்டமும் ஆள் நடமாட்டமும் வெளியார்களைக் கண்டால் குரைத்துத் தள்ளும் தெரு நாய்களின் நடமாட்டமும் எப்போதுமே உண்டு என்பதாலும் அவன் அங்கே படுத்திருந்தால் போதும். விழித்திருக்க வேண்டியதில்லை (கிட்டத்தட்ட அந்தத் தெருவின் எல்லாக் கடை வாசல்களிலும் ராமர் கோவில் உள்பட இரண்டு மூன்று சிறிய கோவில்களின் திண்ணைகளிலும் இரவில் படுத்துறங்குவது நாய்களும் பிச்சைக்காரர்களும்தான்). காற்று, புழுக்கம், பனி என்று எந்தப் புறக் காரணியுமோ அல்லது காய்ச்சல், இருமல், தடுமல் என்று எந்த அகக் காரணியுமோ அவனை அப்படி அங்கே படுத்துக்கொள்வதிலிருந்து இதுவரை தடுத்ததில்லை. அவன் அம்மா சொல்லிக்கூடக் கேட்டதில்லை. முதலாளியும் இன்று படுக்க வேண்டாம் என்று ஒருநாளும் சொன்னதில்லை (படு என்று சொன்னதுமில்லை. சொல்லப்போனால் அவன் அங்கே இரவு நேரங்களில் படுத்துக்கொள்கிறான் என்பதே அவருக்குத் தெரியுமா என்றுகூட அவன் சில வேளைகளில் யோசித்திருக்கிறான். அது குறித்து அவர்களிருவரும் ஒரு நாளும் பேசிக்கொண்டதில்லை). அந்த நிலம் அவர்களுடையது இல்லையென்பது சட்டப்பூர்வமாகவே உறுதி செய்யப்பட்டு- விட்டாலும் அதை அவன் மனம் ஏற்கும் பக்குவத்தை அடையவில்லை என்று அவன் அம்மா அவனுடைய பிடிவாதத்திற்குப் பொருள் கற்பித்துக்கொண்டாள்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!