எனது பதினாறு வயதில், சவர்ண இயக்குநரான த.செ.ஞானவேல் இயக்கிய ‘ஜெய் பீம்’ (2021) என்ற தமிழ்த் திரைப்படத்தை முதன்முறையாகப் பார்த்தேன். நீதிக்காக ஏங்கும் நாதியற்ற, கருத்த நிறமுடைய பகுஜன் மக்களைக் காப்பாற்ற வந்த மீட்பரைப் போலக் கம்பீரமாக உயர்த்தி நிற்க வைக்கப்பட்டிருந்த ‘அழகான / சுத்தமான’ வழக்கறிஞரை மையப்படுத்திய அதன் விளம்பரப் படம் ஏற்கெனவே கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்திருந்தபோதிலும், சட்டப் படிப்பைத் தொடரத் தயாராகிக்கொண்டிருக்கும் ஒருத்தியாக, அத்திரைப்படத்தைத் திரையில் காண ஆர்வத்தோடே இருந்தேன். திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, முற்றிலும் சவர்ண மேலாதிக்கப் பார்வையின் ஒற்றைப் பரிமாணத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த தலித் மனிதர், தனது குரல் செவிமடுக்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தினூடாக மீண்டும் மீண்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் காட்சிகள் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தின. சாதிய ஒடுக்குமுறையைப் பற்றிய தொடக்க நிலை அறிமுகத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கான முயற்சியாகத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இயலாதவராக, பலவீனமானவராக மட்டுமே அவர் தன்னை வெளிக்காட்டிக்கொள்வதோடு, பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் ஆதிக்கச் சாதியினரைக் கோபப்படுத்தாமல் இருப்பதிலும் கவனமாக இருக்கிறார்.
தலித் கதாநாயகர்களை வெறும் பாதிக்கப்பட்ட உடல்களாக மட்டுமே காட்சிப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. 1994ஆம் ஆண்டு சவர்ண இயக்குநரான சேகர் கபூரின் இயக்கத்தில் வெளியான ‘Pandit Queen’ திரைப்படத்தை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும். Pandit Queen என்றழைக்கப்பட்ட பூலான் தேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்தப் படம், அவரது வாழ்வனுபவங்களைத் தவறாகச் சித்திரித்துக் காட்டியதற்காக பூலான் தேவியையே அப்படக்குழுவினருக்கு எதிராக இருமுறை வழக்குத் தொடர வைத்தது. அதுமட்டுமன்றி, தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தீக்குளித்துக்கொள்வதாகவும் அவர் அறிவித்தார். “அந்தப் படத்தில் நான் எப்போதும் அழுதுகொண்டிருக்கும், தீர்க்கமான முடிவெடுக்கத் தெரியாத, எந்தச் செயல்திறனுமற்ற ஓர் அபலைப் பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறேன். மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் ஒருத்தியாக மட்டுமே நான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறேன்” என்பது அவரது வாதமாகும். எந்தப் பெண்ணுடைய வாழ்க்கையைக் காட்சிப்படுத்துவதாக இயக்குநர் சொல்லிக்கொள்கிறாரோ, அந்தப் பெண்ணே அத்திரைப்படத்தை நிராகரிக்கிறார் என்றால், உண்மையில் இந்தப் படம் யாருக்காக உருவாக்கப்பட்டது, யாருடைய மனசாட்சியை அது சவாலுக்கு உட்படுத்துகிறது என்று கேட்க வேண்டியிருக்கிறது.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





