பல்லிராஜா – ஷோபா சக்தி

Image Courtesy: Leon Löwentraut

நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்மா சம்புத்தஸ்ஸ! நான், சாக்கிய முனியும் ததாகதருமான சம்புத்தர் அருளிய தம்மம் வணங்கி; இக்காலத்தில் இலங்கைத் தீவில் பெயர் பெற்றவரும், தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே கொடிய சித்திரவதைக் கூடத்திற்குள் இரகசியமாக வீழ்த்தப்பட்டவரும், தற்போது அய்ம்பத்தியிரண்டு கனிந்த வயதுகள் நிரம்பப் பெற்றவருமான சீவலி பால தேரரின் கதையைக் கூறத் தொடங்குகிறேன்!

ஒரு தெருநாயே இலகுவாக வாயில் கவ்வி இழுத்துச் செல்லக் கூடியளவுக்குத்தான் சீவலி தேரரின் உடலிலுள்ள மொத்த எலும்புகளும் மாமிசமும் இருக்கும். கடுமையான  நீண்ட உபவாசங்களாலும் மற்றைய தினங்களில் ஒருவேளை மட்டுமே உள்ளங்கையளவு உண்ணும் வழக்கத்தாலும் தேரரின் உடல் வற்றிக் கிடக்கிறது. இலங்கையரின் சராசரி உயரத்தைக் காட்டிலும் குறைந்தது ஓரடி அளவுக்காவது தேரரது சரீரம் உயரமாகயிருப்பதால்; சீவர துறவாடை தரித்து, மிதியடிகள் தீண்டா வெற்றுப் பாதங்களால் அவர் நடந்து வரும்போது, ஒரு மஞ்சள் பல்லியைப் போலத்தான் தோற்றமளிக்கிறார். ஆனாலும், அவரது உடல்வலு நம்ப முடியாதளவுக்கு அபரிதமானது என்பதற்கு, அவர் தனது வலப்புறத் தோளில் சுமந்துவரும் சம்புத்தரின் மூன்றடி உயரமான வெண்ணிறக் கற்சிலையே பூரண சாட்சியமாகும்.

கொத்திமலையை நோக்கி, சம்புத்தரின் சிலையைச் சுமந்தவாறே, சீவலி தேரர் தன்னந்தனியாகவே நடந்து வந்துகொண்டிருந்தார். காலையில் முல்லைத் தீவிலிருந்து கால்நடையாகவே புறப்பட்டவர், உச்சி வெயிலில் குளித்து வந்தாலும் சிறிதும் களைப்பு இல்லாதவராகவே காணப்பட்டார். தாகம் அவரை வாட்டியதுதான். அவரது இடதுபுறத் தோளில் தொங்கும் காவிநிறத் துணிப் பையில் தண்ணீர்க் குடுவையும் வடிகட்டியும் உள்ளன. ஆனாலும், கொத்திமலையை அடையும்வரை ஆகாரம், நீர் எதுவுமே உட்கொள்ளக் கூடாது என்றொரு விரதத்தைச் சீவலி தேரர் வரித்திருந்தார். தேரரின் பயணப் பாதையில் எதிர்ப்பட்ட இராணுவ அதிகாரிகளும் சிப்பாய்களும் தேரரை வணங்கி  “ஹாமத்துருவெனே! எங்களது வண்டியில் ஏறி அமருங்கள்” என்று மன்றாட்டமாக அழைத்தபோதும், உணர்ச்சியற்றதும் உதடுகள் பிரியாததுமான புன்னகையுடன் அவர்களது வேண்டுதல்களை நிராகரித்துவிட்டு, தன்னுடைய பித்தவெடிப்பேறிய பாதங்களை எட்டிப்போட்டு நடந்தே சென்றார். அப்போது நேரம் மாலை நான்கு மணியாகிவிட்டது. தூரத்தே கொத்திமலை உச்சியிலிருக்கும் கைக்கல்லும் சீவலி தேரரின் கண்களுக்குத் தெரியலாயிற்று. சூரியன் படுவதற்குள் தோளிலிருக்கும் சம்புத்தரின் சிலையை இறங்கி வைத்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தில் தேரர் இருந்ததால், எலும்பு துருத்திக்கொண்டிருக்கும் தன்னுடைய கொக்குப் பாதங்களை இன்னும் வேகமாக முடுக்கிவிட்டார்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!