நேருவின் பௌத்தமும் அசோகரும் – அரவிந்தன் கண்ணையன்

பல காரணங்களால் இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் காலனி ஆட்சிக்காலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிகள், பழங்கால இந்தியாவின் இலக்கிய மீட்டெடுப்புகள் ஆகியவை பௌத்தத்தை மீண்டும் பேசு பொருளாக்கின. 19-20ஆம் நூற்றாண்டுகளில் பௌத்தம் இந்தியாவில் புத்துயிர் பெற்றது. இந்தப் புத்துயிர்ப்பு மூன்று முக்கியத் தளங்களில் நிகழ்ந்தது.

முதல் தரப்பு பௌத்தப் புத்துயிர்ப்பில் வரலாற்று ரீதியான தத்துவப் பௌத்தத்தை, அதன் மத மையத்துடன் மீட்டெடுக்க முயன்றது. இந்தத் தரப்பில் முக்கியமானவர்கள் தர்மானந்த கோசாம்பி, ராகுல சாங்கிருத்யாயன், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆச்சார்யா நரேந்திர தேவா, சிங்காரவேலர் ஆகியோர். இவர்களில் பலர் பிராமணர்களாகவே இருந்தனர்.

19ஆம் நூற்றாண்டில் தலித் மக்கள், பௌத்தத்தை மீட்பது என்பதைத் தாண்டிப் அதை மறுஉருவாக்கம் செய்து தத்துவார்த்தமாகவும் அரசியலாகவும் சுவீகரித்ததை இரண்டாம் தரப்பு எனலாம். இத்தரப்பின் முன்னோடியாக அயோத்திதாசரையும் உச்சமாக அம்பேத்கரையும் சொல்லலாம். லட்சுமி நரசு, தலித்தல்லாதவர் எனினும், தாசருடன் பணியாற்றியவர்களுள் முக்கியமானவர்.

மூன்றாவது தரப்புப் பௌத்தத்தை அதன் சாதி, சடங்குகள் கடந்த அறிவுப்பூர்வமான மையத்தை முதன்மைப்படுத்திப் புதியதோர் இந்தியாவுக்கு ஒரு கருத்தியலாக முன்னெடுத்துச் சென்றது. இத்தரப்பில் முக்கியமானவர் ஜவஹர்லால் நேரு.

நேருவுக்குப் பள்ளிக் காலத்திலிருந்தே புத்தரின் மீதும், பௌத்தத்தின் மீதும் அவற்றின் நீட்சியான அசோகரின் மீதும் பெரும் ஈர்ப்பு உண்டு. தான் நிர்மானிக்க நினைத்த அறிவியல் பூர்வமான மதப் பூசல்களற்ற இந்தியாவுக்குப் பௌத்தம் ஒரு தத்துவ அடித்தளம் என்று கருதினார். அதைச் செயல்படுத்துவதற்கு அசோகரை முன்மாதிரியாகக் கொண்டார். நேரு பிரதமராக இருந்தபோது மிக முக்கியப் பௌத்த மீட்டெடுப்புகள் நிகழ்ந்தன. அவற்றின் முக்கியத்துவத்தையும் அதில் நேருவின் பங்கையும் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

பௌத்தம், புத்தர், அசோகர் பற்றி நேரு

நேருவின் முதல் ஆசிரியரான எஃப்.டி.ப்ரூக்ஸ் (Ferdinand T.Brooks) தியோசோபிகல் சொசைட்டியைச் சேர்ந்தவர். இவர் மூலமாக 11 வயதில் நேருவுக்குப் புத்தரின் தம்மபதம் அறிமுகமானது. பின்னர் நேரு, அன்னி பெசண்டின் ஆசியோடு தியோசோபிகல் சொசைட்டியில் சேர்ந்தார். அங்கு ஹென்றி ஆல்காட்டையும் சந்தித்தார். ஆல்காட்டும் அயோத்திதாசரும் சேர்ந்து பணியாற்றியவர்கள். சோவியத் புரட்சியின் பத்தாமாண்டு விழாவின் போது ஜவஹர்லால் நேருவும் மோதிலால் நேருவும் மாஸ்கோவில் இருந்தனர். அந்தப் பயணத்தைப் பற்றிய தன் கட்டுரைத் தொடரில் ரஷ்ய பௌத்த ஆய்வாளர் பேராசிரியர் பியோதர் ஸ்டெர்பேட்ஸ்கியை (Fyodor Stcherbatsky) நேரு குறிப்பிட்டதைப் பார்த்து, தர்மானந்த கோசாம்பி பௌத்தம் பயில ருஷ்யா சென்றார். நைனி சிறையிலிருந்து ஜனவரி 20, 1931இல் நேரு தன் 14வயது மகளுக்கு எழுதிய கடிதத்தில் மதங்களைப் பற்றி எழுதும்போது பௌத்தம் பற்றியும் புத்தர் பற்றியும் குறிப்பு தருகிறார். புத்தர் சீர்திருத்தவாதி என்றும் பிராமணர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர் என்றும் நேரு எழுதுகிறார். அதே வருடம் தன் மனைவி, மகளுடன் இலங்கைக்குச் சுற்றுலா சென்ற நேரு, புத்த மடங்களுக்கும் சென்றார். அனுராதபுரத்தில் அமர்ந்த நிலையில் இருக்கும் புத்தர் சிலையின் முன் நின்றது தனக்கு அமைதியைத் தந்தது என்றும் பின்னர் நண்பரொருவர் அச்சிலையின் புகைப்படத்தை வேறொரு சிறையிலிருந்த தனக்கு அனுப்பியதாகவும் அப்படம் தனக்குத் துணையாக இருப்பதாகவும் அதனைப் பார்க்கும் போதெல்லாம் மனம் தெம்புற்றதாகவும் தன் சுயசரிதையில் எழுதுகிறார். பௌத்தத்தின் மீது தனக்கு எப்போதும் ஈர்ப்பு இருந்ததென்றும் அது மதம் சாராத புத்தர் என்கிற ஆளுமையின் மீதான ஈர்ப்பு என்றும் விளக்கம் கொடுக்கிறார். தக்ஷசீலத்தில் இருந்த புத்தரின் நினைவுப் பொருள்களை 1931இல் மஹா போதி சங்கம் புதிதாக நிர்மாணித்த புத்தக் கோயிலில் வைக்கும் விழாவில் நேரு தன் மனைவி, மகளுடன் பங்கெடுத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அநேக பௌத்த சமயம் சார்ந்த தலங்களுக்குச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!