வெள்ளைப் பாப்பாத்தி – ம.நவீன்

ஓவியம்: ஸ்ரீதர்

மினி சைக்கிளின் இரும்புக் கேரியரில் அமர்ந்துகொண்டால் ருக்குவின் பிட்டம் கொடிமலருக்குத் தலையணையாகிவிடும். பெடலை மிதிக்கும்போது விளம்பித லயத்தில் தலை அசைந்து தாலாட்டுவது போல இருக்கும்.

அவள் பள்ளிக்கு மட்டம் போடத்தொடங்கிய ஒருசில நாட்களுக்கு முன்புதான் இறுதியாண்டு சோதனை முடிந்திருந்தது. இரவல் பாடப் புத்தகங்களை ஒப்படைத்துவிட்டு, தேர்வுத்தாள்களையும் முடிவு அட்டையையும் பெற்றுக்கொள்ளச் சொல்லிக் கதிர்வேலுவை ஆசிரியர் ஏவும்வரைப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றே அவளுக்குத் தோன்றவில்லை. அன்றைய தினத்தைத் தவறவிட்டால் வருட இறுதி விடுமுறை நீண்டுவிடும். பொதுவாக இறுதி ஆண்டுத் தேர்வு முடிந்தபின் பாடங்கள் நடக்காது. என்றாலும் ஆர்.எம்.டி உணவு  கிடைக்கும் என்பதால் அம்மாதான் தினமும் அவளைப் பள்ளிக்குச் செல்லும்படி விரட்டிக்கொண்டிருந்தாள்.

கேரியர் அழுத்துவதில் தொடைகளில் நோவெடுத்தது கொடிமலருக்கு. சைக்கிள் போகும் வேகத்தில் குளிர்காற்று உரசி உதடுகள் அதிர்ந்தன. அவள் கைகள் அவ்வப்போது தன்னிச்சையாக ரிப்பனைப் பிடித்துப் பார்த்துக்கொண்டன. இம்முறை தேர்வில் முதலாவதாக வந்தால் அம்மா வெள்ளை ரிப்பன் வாங்கித் தருவதாகக் கூறியிருந்தாள்.  இரட்டைப் பின்னல் பின்னி  சடை போட்டு, கறுப்பு ரிப்பனால் மடித்துக் கட்டும்போது தலையில் அதன் இருப்புத் தெரிவதே இல்லை. வெள்ளை ரிப்பன் கட்டிக் கொண்டால் இரண்டு வெள்ளை வண்ணத்துப்பூச்சிகள் தலையின் இருபக்கமும் அமர்ந்திருப்பதுபோல இருக்கும் எனக் கற்பனை செய்துகொண்டாள். அம்மா சைக்கிளில் வேகமாகப் போகும்போது அவை தலைக்கு மேலாகப் பறக்கும். வெள்ளை வண்ணத்திகள் தன் தலைக்கு மேல் பறந்து அவள் பார்த்ததில்லை.

வெள்ளை வண்ணத்திகள் என்றால் அவளுக்குக் கொள்ளை விருப்பம். ஓவியப் பரீட்சையில் ஆசிரியர் வண்ணத்துப்பூச்சியை வரையச் சொன்னபோதுகூட அவள் தாளுக்கு நடுவில் சிப்பி ஓடுகளைப்போல கூர் மழுங்கிய இரு முக்கோணங்களை இடம், வலமாக வரைந்து அதன் பின்புலத்தில் கரும்பச்சையைப் பூசியபோது வெள்ளை வண்ணத்திப் பளிச்செனப் பிரகாசிக்கத் தொடங்கியது. வெள்ளை வண்ணத்தி என்பது முழுக்கவும் வெள்ளைதான் என்பதால் உணர்வுக் கொம்புகள் இரண்டை மட்டும் கறுப்பு வண்ணப்பென்சிலால் கீறியபோது அதன் வலது இறக்கையில் மெல்லிய அசைவு தெரிவதாக உணர்ந்தாள். அவள் பார்த்ததிலேயே அதுதான் பெரிய வெள்ளை வண்ணத்துப்பூச்சியாக இருந்தது. எனவே, அதனால் வான் நோக்கி உயரமாகப் பறக்க முடியும் என நினைத்துக்கொண்டாள். அதிக உயரம் பறக்காமல் தரையோடு சுற்றிக் கொண்டிருக்கும் வெள்ளை வண்ணத்திகளை முன்பு தோட்டத்தில் கண்டிருக்கிறாள். அவை பரிசுத்தமானவை. அப்போதெல்லாம் அப்பா இருந்தார். காண்டா கம்புகளின் இரு முனையிலும் நிரப்பப்பட்ட ரப்பர் பால் வாளிகளுடன் அப்பா நடந்து செல்லும்போது காலை வெயிலில் அவற்றின் வெண்மை ஒளிரும்.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!