ஃபஷ்றி கவிதைகள்

ஓவியம்: சரவணன்

என் திண்ணை எறும்புகளின்
வரிசைக் கோட்டுச் சாலையில் செல்கிறேன்
சாலை கிளைக்கிறது
எறும்புகள் போல்
நான் உழைத்த காலங்கள்
மரங்களாய் நிற்கும்
சாலையின் இரு மருங்கிலும்
நிழல்களில் மனிதர்கள்
கிளைகளில் பறவைகள்
கூடுகளில் இருக்கும் குஞ்சுகளுக்கு
அலகுடன் அலகு பொருத்தி இரையூட்டும் பறவைகள்
இலைகளில் பனித்துளிகளாய்ப் பூத்திருக்கின்றன
என் வியர்வைத் துளிகள்.

 

வெளிச்சுவரில் சாய்ந்தவாறு
பிரபஞ்சத்தைப் பார்த்தவண்ணம் நிற்கிறேன்
எதிர் மரக்கிளையில்
பறவையன்று அமர்ந்திருக்கிறது
இருவருக்கும் பொதுவான மொழியில்
உடன்படிக்கை செய்துகொள்கிறோம்
ஒரு மணி நேரத்துக்கு
நான் பறவையின் உடலினுள்ளும்
பறவை எனதுடலினுள்ளுமாக
இதோ உடல்களுக்குள் மாறிக்கொள்கிறோம்
சிறகு விரித்துப் பறக்கத் தொடங்குகிறேன்
கீழிருந்து எனது குரல் கேட்கக்
குனிந்து பார்த்தேன்
‘இத்தனை துக்கித்தல்களையும்
தாங்கிக்கொண்டு ஒரு நிமிடம் கூட வாழ முடியாது,
உடனே இறங்கி வா,
என்னுடலைத் தா’
கதறுகிறது அவ்வுயிர்.

 

டெஃபடெல்ஸ், பதின் மூன்றாம் நூற்றாண்டின்
கவர்ச்சிமிகுக் கவிதை சொல்லி
நேற்று பாஸிலோனாவின் புகழ்பெற்ற புராதன நூலகம் ஒன்றில்
அவனது கவிதைத் தொகுப்பில் அவனைச் சந்தித்தது மனம்
அவனுக்கு அறுபத்தெட்டுக் காதலிகள் இருப்பதாகவும்
அவர்களில் ஒருத்தி பெஹன் சூத்,
அவள் மட்டும்தான் தன் கணவனுடன் வாழ்ந்து வருவதாகவும்
அவளிடம் மட்டுமே ஈர்ப்புக் கொண்டுள்ளதாகவும்
அவளை அவ்வப்போது மட்டுமே அடைய முடிந்ததாகவும்
அவளை அடைவது அவ்வளவு சுலபமில்லை எனவும்
அவள் தேவைப்படும்போது அவளுடனான சொப்பன நினைவுகளைக்
காலத்தின் ஆழத்திலிருந்து தோண்டி எடுத்து அவளுடன் வாழ்ந்து வருவதாகவும் கதை சொன்னான்
பதின் மூன்றாம் நூற்றாண்டுக் கவிஞன் டெஃபடெல்ஸ்
பிறிதொரு சந்தர்ப்பத்தில் படிக்கலாமென்று என் அறைக்குத் திரும்பினேன்
மனவறை முழுதும் நிறைந்திருந்தாள் பெஹன் சூத்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!